ஹாங்காங்கில் தொடர்ந்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களால் அங்குள்ள வர்த்தகங்களுக்குத் தடங்கல்கள் ஏற்பட்டாலும் அவை சிங்கப்பூருக்கு இடம்பெயரவில்லை. அவ்வாறு அந்த வர்த்தகங்கள் இங்கு இடம்பெயர்வதையும் சிங்கப்பூர் விரும்பாது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார். ஹாங்காங்கில் சாந்தம் நிலவவேண்டும் என்றும் அங்கேயே வர்த்தகங்கள் நிம்மதியுடன் தொடரவேண்டும் என்றும் விரும்புவதாகத் திரு லீ நேற்று கூறினார்.
வர்த்தகங்கள் ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்கு இடம் மாறுகிறதா என்று ஃபார்ப்ஸ் அனைத்துலக தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான மாநாட்டில் திரு லீயிடம் கேட்கப்பட்டது.
மாநாட்டின்போது, ஹாங்காங் ஆர்ப்பாட்டத்தால் சிங்கப்பூர் எதிர்நோக்கும் விளைவுகள் என்ன என்பது குறித்து ஸ்டீவ் ஃபோர்ப்ஸிடம் கேட்கப்பட்டது.
“வட்டாரம் நிலையாக இருக்கும்போதும் மற்ற நாடுகள் செழிக்கும்போதும் சிங்கப்பூரில் எங்களால் மேலும் சிறப்பாகத் தாக்குப்பிடிக்க முடியும். அந்நாடுகளுடன் நாங்கள் வர்த்தகம் செய்ய முடியும்,” என்றார் பிரதமர் லீ.
ஹாங்காங் முன்னே செல்வதற்கான எந்தச் சுலபமான வழியையும் தம்மால் காண இயலவில்லை என்று பிரதமர் லீ கூறினார். முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஹாங்காங்கின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அன்றி அரசாங்கத்தை தலைகுனியவைத்து அதனை வீழ்த்துவதற்காகவே செய்யப்படுவதாக அவர் கூறினார்.
ஒரு நாடு இரண்டு அமைப்பு என்ற கொள்கையைப் படிப்படியாகத்தான் எதிர்கொள்ள முடியும் என்று திரு லீ கூறினார். இந்தச் சர்ச்சையிலுள்ள இரண்டு தரப்பினருக்குமே பக்குவமும் கட்டுப்பாடும் தேவை என்று அவர் கூறினார்.