போதைப்பொருள் தொடர்பிலான சிறுநீர் மாதிரியை மாற்றி வைத்து நீதித்துறை தன் கடமையைச் செய்யத் தடையாக இருந்ததன் தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போதைப்பொருள் உட்கொண்டதாகக் கூறப்பட்ட மாவொங் மோ மின் என்பவரின் சிறுநீர் மாதிரிக்குப் பதிலாக ஸ்டாஃப் சார்ஜண்ட் முகம்மது ஹஃபிஸ் லான், 41, தனது சிறுநீரை மாற்றி வைத்ததாகக் கூறப்படுகிறது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியின் கட்டடத்தில் நடந்த இச்சம்பவத்தின்போது ஹஃபிஸ் சிறுநீர் மாதிரியை மாற்றி வைத்ததாகவும் அதற்கு 43 வயதுடைய ஸ்டாஃப் சார்ஜண்ட் அப்துல் ரஹ்மான் காதர் மற்றும் 31 வயதுடைய சார்ஜண்ட் முகம்மது ஸுஹாய்ரி ஸாய்துரி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக நம்பப் படுகிறது.
சிறுநீர் மாதிரியை மாற்றி வைத்ததால் மாவொங் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்று சோதனை முடிவுகள் காட்டின. மாவொங் பற்றிய கூடுதல் விவரங்களும் அவரது வழக்கு தொடர்பான தகவல்களும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
சிறுநீர் மாதிரியை மாற்றி வைத்ததற்காக மூன்று அதிகாரிகளுக்கும் என்ன சன்மானம் கிடைத்தது என்பது குறித்துத் தகவல் கூறப்படவில்லை. இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மூன்று அதிகாரிகள் மீதும் நேற்று சட்டத்திற்கு இடையே குறுக்கிட்டதற்கான ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மூவருக்கும் தலா $10,000 பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஹஃபிஸ் மீண்டும் அடுத்த மாதம் 8ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் முன்னிலை ஆவார்.
இத்தகைய மோசடி குற்றங்களில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபடும்போது விசாரணை உடனே லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது. இதன் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகளே சட்டத்தை மீறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கூறியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூவருக்கும் ஏழு ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.