பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற ‘தேஸ்கம்’ பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 73 பேர் மாண்டுபோயினர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பயணிகளில் சிலர் காலை உணவு தயாரித்துக்கொண்டு இருந்தபோது எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் கூறினார். இதில் ரயிலின் மூன்று பெட்டிகள் தீக்கிரையாகின. தீப்பற்றியதும் பயணிகளில் பலர் கீழே குதித்து உயிர் தப்பியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்குத் தலா 1,500,000 ரூபாயும் (S$13,200) காயமடைந்தவர்களுக்குத் தலா 500,000 ரூபாயும் (S$4,400) நிதியுதவி வழங்கப்படும் என்று திரு ரஷீத் அறிவித்துள்ளார்.
மீட்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அவர்களுக்கு உதவ ராணுவத்தினர், மருத்துவர்கள், துணை மருத்துவப் படையினர் ஆகியோரும் அனுப்பப்பட்டனர். காயமடைந்தோரை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டது.
ரயிலில் எரிவாயு உருளையை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்ற நிலையில், சம்பந்தப்பட்ட பயணிகள் தங்களது பயண உடைமைகளுடன் அதை மறைத்து எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ரயில் தீ விபத்தை அறிந்து தாம் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகக் கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மாண்டோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெற இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.