சிங்கப்பூர்: ஈசூனில் எஸ்எம்ஆர்டி பேருந்தால் மோதப்பட்ட 77 வயது ஆடவர் உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த விபத்து காலை சுமார் 10.10 மணிக்கு ஈசூன் அவென்யூ 5க்கும் அவென்யூ 2க்கும் இடையிலான சாலை சந்திப்பில், நார்த்பாயிண்ட் கடைத்தொகுதிக்கு முன்பு நடந்ததாகப் போலிசார் இன்று தெரிவித்தனர்.
காயமடைந்த பாதசாரி சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பிறகு அவர் தமது காயங்களுக்குப் பலியானார்.
பாதசாரிகள் பலருடன் சாலையைக் கடந்து சென்றுகொண்டிருந்த முதியவர், போக்குவரத்து விளக்கு பச்சையிலிருந்து சிவப்புக்கு மாறியதற்குள் சாலையைக் கடந்து முடிக்க முடியவில்லை. அப்போதுதான் அந்த ஈரடுக்குப் பேருந்து அவரை மோதியதாகக் கூறப்படுகிறது.
கவனக்குறைவாக நடந்துகொண்டதன் தொடர்பில் கைது செய்யப்பட்ட 29 வயது பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.