கேன்பரா எம்ஆர்டி நிலையம் நேற்று அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது. முதன்முதலாக திறக்கப்பட்ட வடக்கு-தெற்கு ரயில் பாதையில் இந்தப் புதிய நிலையம் இடம்பெறுகிறது. பயணிகளுக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஏதுவான அம்சங்களை கேன்பரா எம்ஆர்டி நிலையம் கொண்டிருக்கிறது.
30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வடக்கு-தெற்கு ரயில் பாதையில் திறக்கப்பட்டுள்ள கேன்பரா நிலையம், சிங்கப்பூர் ரயில் கட்டமைப்பின் 139வது நிலையம் எனப் போக்குவரத்து ஆமைச்சர் கோ பூன் வான் தெரிவித்தார்.
கேன்பரா பிளாசாவுடன் இணையும் மேம்பாலத்திலிருந்து நேரடியாக நிலையத்தின் பயணச்சீட்டுத் தளத்துக்குப் பயணிகள் செல்லலாம் என்றார் அமைச்சர்.
“குடியிருப்பாளர்களில் பலர் வேலை செய்யும் தம்பதிகள். அவர்களில் பலருக்குப் பிள்ளைகள் இருக்கின்றனர். எனவே, கேன்பரா பிளாசாவில் குழந்தைப் பராமரிப்பு வசதிகள் அமைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். கேன்பரா எம்ஆர்டி நிலையத்தில் பசுமைத் திட்டத்துக்கு ஏதுவான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, எரிசக்தியைச் சிக்கனப்படுத்தும் குளிர்சாதன, விளக்குகள் உள்ளன. இதனால் நிலையத்தை இயக்க ஏற்படும் செலவுகள் குறையும். ரயில் கட்டணங்கள் கட்டுப்படியானதாக இருக்க இது உதவும்,” என்றார் திரு கோ.
கட்டடம், கட்டுமான ஆணையம் ரயில் நிலையங்களுக்காக ஆக உயரிய பிளாட்டினம் தரநிலை யை வழங்குகிறது. இந்தப் பிளாட்டினம் தரநிலையைப் பெற்ற முதல் எம்ஆர்டி நிலையம் எனும் பெருமை கேன்பரா நிலையத்தைச் சேரும்.
அந்த வட்டாரக் குடியிருப்பாளர்கள் புதிய நிலையத்தை பத்து நிமிடங்களில் நடந்து சென்று அடைந்துவிட முடியும். அங்கிருந்து அவர்கள் ரயில் மூலம் மரினா பேயை அரை மணி நேரத்தில் அடைந்துவிடலாம்.
கேன்பரா நிலையம் ஏற்
கெனவே இயங்கிக்கொண்டிருக்கும் ரயில் பாதையில் கட்டப்படும் இரண்டாவது நிலையமாகும். இதற்கு முன்பு 2001ஆம் ஆண்டில் கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு முன்னால் டோவர் நிலையம் திறக்கப்பட்டது.
சவால்மிக்க பணியை எவ்வித அசம்பாவிதமும் இன்றி நிறைவு செய்ததற்காக நிலப் போக்குவரத்து ஆணையத்தை அமைச்சர் கோ பாராட்டினார். தேவை இருந்தால் மட்டுமே புதிய எம்ஆர்டி நிலையங்களும் ரயில் பாதைகளும் கட்டப்படுவதாக திரு கோ குறிப்பிட்டார்.
“ஒவ்வொரு ரயில் பாதையையும் கட்ட பல பில்லியன் வெள்ளி செலவாகிறது. எனவே, இது தொடர்பாக கவனத்துடன் செயல்
படுகிறோம். பயணிகள் அதிகம் இருந்தால் மட்டுமே புதிய எம்ஆர்டி நிலையங்கள், ரயில் பாதைகளைக் கட்டுகிறோம்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.