ஆசியானுடன் பஸ்பர நலன்களைக் கொண்டுள்ள இடங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா தயார் என்று அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். ஆசியான்-இந்திய உச்சநிலைக் கூட்டத்தில் தெற்காசிய தலைவர்களின் முன்னிலையில் உரையாற்றிய திரு மோடி, “எங்களின் ஏக்ட் ஈஸ்ட்’ கொள்கையில் ஆசியான் மையமாகத் திகழ்கிறது; அது என்றென்றும் அவ்வாறே திகழும். ஒருங்கிணைந்த, ஒற்றுமையான, பொருளியல் ரீதியாக வளரும் நிலையில்தான் ஆசியான், இந்தியாவின் மூல நலன்களை நிறைவு செய்கிறது ” எனத் தெரிவித்தார்.
“மேம்பட்ட வெளிப்பரப்பு மற்றும் கடல்துறை இணைப்புகள் வழியாகவும் மின்னிலக்க இணைப்புகள் மூலமாகவும் எங்களது பங்காளித்துவத்தை மேம்படுத்த நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார். 35ஆவது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் பரந்த வட்டார பொருளியல் ஒப்பந்தத்தை (ஆர்சிஇபி) நிறைவுசெய்ய ஆசியான் நாடுகள் விரும்பும் நேரத்தில் திரு மோடியின் கருத்துகள் வெளிவந்துள்ளன. ஆயினும் இந்த ஒப்பந்தத்தில் இணைய தயக்கம் காட்டும் ஒரே நாடு இந்தியா என கவனிப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.ஆசியானை மேலும் ஈடுபடுத்துவது பற்றி பேசிய திரு மோடி, ஆர்சிஇபி ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை.
உலகின் ஆகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாக ஆர்சிஇபி திகழவிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் 10 ஆசியான் நாடுகள், சீனா, இந்தியா, தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவை இணைந்துள்ளன.