திங்கட்கிழமை நொவீனாவில் நடந்த பாரந்தூக்கி விபத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியருக்கும் காயமடைந்த மற்றோர் ஊழியருக்கும் மருத்துவச் செலவுகளும் இழப்பீடும் தரப்படும் என வெளிநாட்டு ஊழியர்களுக்கான “மைக்ரன்ட் வொர்க்கர்ஸ் சென்டர்” நிலையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
பணித்தளத்தின் மத்திய குத்தகையாளரும் இரு ஊழியர்களின் முதலாளிகளும் “பாதிக்கப்பட்ட இரு ஊழியர்களுக்கும் தங்களது கடமைகளை நிறைவேற்றுவார்கள்” என நிலையம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.
அதோடு, மத்திய குத்தகையாளரான கஜிமா ஓவர்சீஸ் ஆசியா (சிங்கப்பூர்) நிறுவனமும், இறந்த ஊழியரின் முதலாளியான எல்கேடி கான்ட்ரக்டர்ஸ் நிறுவனமும் அவரது குடும்பத்திற்கு ரொக்கத்தொகையும் அனுப்பி வைக்கவுள்ளன. “பணிக்காலக் காய இழப்பீடு வழங்கப்படுவதற்கு முன்பாக அவர்கள் எதிர்நோக்கும் சிரமமான காலகட்டத்தைக் கடப்பதற்கு இது உதவியாக இருக்கும்,” என்று நிலையம் கூறியது.
நொவீனாவில் மறுவாழ்வு மையம் கட்டப்படும் பணித்தளத்தில் திங்கட்கிழமை காலை பாரந்தூக்கி சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 28 வயது இந்திய நாட்டு ஆடவர் உயிரிழந்தார். பங்ளாதேஷை சேர்ந்த 35 வயது ஊழியர் காயமடைந்தார்.