இந்தோனீசியாவின் வடக்கு சுமத்ரா நகரமான மேடானின் போலிஸ் தலைமையகத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் இன்று காலை 9.40 மணியளவில் (இந்தோனீசிய நேரப்படி காலை 8.40 மணி) நிகழ்ந்ததை இந்தோனீசிய தேசிய போலிஸ் பேச்சாளர் முஹம்மது இக்பால் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் மனித வெடிகுண்டு என்று சந்தேகிக்கப்படும் நபர் கொல்லப்பட்டதுடன் ஐந்து போலிசார் உட்பட ஆறு பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது. பல வாகனங்கள் சேதமடைந்தன.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
போலிஸ் அலுவலக வளாகத்துக்குள் காலை 8.40 மணியளவில் நடந்து சென்ற ஓர் ஆடவர், அலுவலகம் ஒன்றின் முன்பாக வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் கூறப்பட்டது.
“வெடிகுண்டு அதிக வெடிப்புத் தன்மை கொண்டதா என்பதைப் பற்றி இன்னும் தெரியவில்லை. Inafis எனப்படும் இந்தோனீசியா அணு ரேகை அடையாள அமைப்பும் தடயவியல் சோதனை அதிகாரிகளும் சம்பவ இடத்தை ஆராய்ந்து வருகிறார்கள்,” என்றார் திரு இக்பால்.
போலிஸ் தலைமையகத்தைச் சுற்றியுள்ள கட்டடங்களிலிருந்து மக்கள் வெளியில் ஓடிச் செல்வதைக் காட்டும் காணொளிகள் இந்தோனீசியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.
சம்பவ இடத்தில் பலத்த சத்தத்தைத் தொடர்ந்து அடர்ந்த புகை கிளம்பியதாக சம்பவத்தின்போது அந்தப் பகுதியில் இருந்த ஒருவர் குறிப்பிட்டார்.
ஜோன்ஸ் என்று அறியப்படும் மற்றோர் ஆடவர் மெட்ரோடிவியிடம் சம்பவம் குறித்துப் பகிர்ந்துகொண்டதில் இரு ஆடவர்கள் ஒரு பையுடன் கார் நிறுத்தும் இடத்துக்கு அருகில் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்ததாகச் சொன்னார்.
வாடகை டாக்சி நிறுவனம் ஒன்றின் மேல்சட்டையை அணிந்திருந்த அவ்விருவரது நடவடிக்கை சந்தேகத்துக்கு உரியதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்த இருவரில் ஒருவர் அலுவலக வளாகத்துக்குள் நடந்து சென்றதாகவும் போலிஸ் ஆணையர் அப்துல் முடோலிப் சந்தேக நபரைத் துரத்திச் சென்றதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத போலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
ஆனால் அந்த ஆடவரை ஆணையர் நெருங்கும் முன்பாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அலுவலகத்துக்கு முன்பாக வெடிகுண்டை அவர் வெடிக்கச் செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது பற்றிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.