இந்தி கேளிக்கை நிலையங்களை நடத்தி வந்த இந்தியாவைச் சேர்ந்த கணவனும் மனைவியும் தங்களிடம் பணியாற்றிய மூவரின் உழைப்பைச் சுரண்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வசைபாடுதல், கடுமையான அபராதங்கள், நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல் எனப் பல வழிகளிலும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தங்களின் ஊழியர்களைப் பாடாய்ப்படுத்தியாக மல்கர் சாவ்லாராம் ஆனந்த், 51 - பிரியங்கா பட்டாச்சார்யா ராஜேஷ், 31 என்ற தம்பதி மீதான மூன்று குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டன. அத்துடன், அவ்விருவர் மீதான பாலியல் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன.
ஒரு கேளிக்கை நிலையத்தின் நிர்வாக நடத்துநராகவும் இன்னொரு நிலையத்திற்குக் கலைஞர்களைத் தேர்வு செய்து வேலைக்கு எடுப்பவராகவும் மல்கர் செயல்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்படி அந்த நிலையங்களுக்கு பங்ளாதேஷ் நடனமணிகள் மூவரை அவர் தேர்வுசெய்து அழைத்து வந்தார். அவர்கள் மூவரும் மல்கர்-பிரியங்கா தம்பதியுடன் ஒரே தனியார் வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்பட்டது.
கணவனும் மனைவியும் சேர்ந்து அவ்விரு நிலையங்களை நடத்தி வந்தனர். இருப்பினும், அந்த பங்ளாதேஷ் பெண்கள் தனியாக வீட்டைவிட்டு வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை என்றும் அப்பெண்களின் கடப்பிதழ், வேலை அனுமதிச்சீட்டு, கைபேசி ஆகியவற்றைப் பறித்து வைத்துக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது.
அப்பெண்கள் மூவரும் எல்லா நாளும் வேலை செய்ய வேண்டியிருந்தது. அவர்களுள் குறைந்தது இருவருக்கு சொன்னபடி 60,000 டாக்கா ($965) ஊதியத்தையும் அந்தத் தம்பதி வழங்கவில்லை.
கிடைக்கும் ‘டிப்ஸ்’ பணத்தையும் அவர்களே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஒரு நாளைக்கு இவ்வளவு வருமானம் ஈட்டவேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. அப்படி, அந்த வருமான இலக்கை எட்ட முடியாத நாட்களில் அவர்களது சம்பளம் குறைக்கப்பட்டது அல்லது அவர்கள் ‘பிளாக்லிஸ்ட்’ செய்யப்பட்டனர் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அப்பெண்களுள் ஒருவரை ‘வாடிக்கையாளர்களுடன் வெளியே சென்று வரும்படி’, அதாவது அவர்களுக்குப் பாலியல் சேவை வழங்கும்படி பிரியங்கா சொன்னதாகவும் கூறப்பட்டது.
இதையறிந்ததும் தான் பங்ளாதேஷ் திரும்ப விரும்பியதாகவும் ஆனால் முதலில் 400,000 டாக்கா பணத்தைத் தரவேண்டும் என்று பிரியங்கா சொன்னதாகவும் அப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதே எண்ணத்துடன் பலமுறை அவரை அணுகிய பிரியங்கா, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் பாதியை அவரது வீட்டிற்கு அனுப்பிவிடுவதாகவும் ஆசைகாட்டியுள்ளார்.
ஆனால் ஒவ்வொரு முறை வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவு கொண்டபின் வீட்டிற்குத் திரும்பியதும் அப்பெண்ணின் உடலை முழுமையாகச் சோதித்து, அவருக்குக் கிடைத்த பணத்தையும் மற்ற பொருட்களையும் பிரியங்கா எடுத்துக்கொண்டதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஐந்து மாதங்கள் வேலை செய்தபிறகு 2016 மே மாதம் அந்தப் பெண் அந்தக் கேளிக்கை நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இன்னொரு கேளிக்கை நிலையத்தில் வேலை செய்த மற்ற இரு பெண்களும், வேலையில் சேர்ந்து இரு மாதங்களுக்குள்ளாகவே, அதாவது 2016 ஜூன் 1ஆம் தேதி அங்கிருந்து நின்றுவிட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களைப்போல, மல்கர்-பிரியங்கா தம்பதி நம்பத்தகுந்த சாட்சியங்களாக இல்லை என்று நேற்றுத் தீர்ப்பு வாசித்தபோது மாவட்ட நீதிபதி சைஃபுதீன் சருவான் கூறினார்.
அந்த ஏழை வெளிநாட்டு ஊழியர்கள் பணம் ஈட்டுவதற்காக வந்தபோதும் அவர்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டியிருந்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
மல்கர்-பிரியங்கா தம்பதிக்கான தண்டனை விவரம் அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.