சிங்கப்பூரின் முதல் மின்சார மோட்டார் சைக்கிள் விரைவில் முழுவீச்சில் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மின்சார மோட்டார் சைக்கிளின் மாதிரி வடிவம் அறிமுகமாகிறது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் யூரோஸ்போர்ட்ஸ் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் முழுமையாக மின்சாரத்தில் ஓடும் ‘Scorpio EST-X1’ மின்சார மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது.
இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான யூரோஸ்போர்ட்ஸ் குளோபல் இதற்குப் பக்கபலமாக இருந்து வருகிறது. லம்போகினி, ஆல்ஃபா ரோமியோ போன்ற கார்களின் வர்த்தக உரிமைகளை வைத்துள்ளது யூரோஸ்போர்ட்ஸ் நிறுவனம்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய ஸ்கார்பியோ எலக்டிரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மெல்வின் கோ, “மாதிரி வடிவம் அறிமுகமானதும் தயாரிப்பு வேலைகள் தொடங்கும்,” என்றார்.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைக்கும் சில இளம் பொறியாளர்களின் சம்பளங்களுக்கும் மானியம் மூலம் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
அதிகாரபூர்வ ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை. ஆனால் தொழிற்சாலைக்கான மானியம் ஒரு மில்லியன் வெள்ளி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைெபற்ற சிங்கப்பூர் புத்தாக்க, தொழில்நுட்ப வாரம் மற்றும் சிங்கப்பூர் நிதி தொழில்நுட்ப விழாவின்போது ‘ஸ்கார்பியோ எலக்ட்ரிக்’ முகவைக்கு பிரதமர் லீ சியன் லூங்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் வருகையளித்தனர்.
பின்னர் ஃபேஸ்புக் பக்கத்தில் Scorpio EST-X1 படத்தை வெளியிட்ட பிரதமர், சிங்கப்பூரில் ‘ஹார்லி டேவிட்சன்’ உருவாகுதோ என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
உள்ளூர் நிறுவனமான ஸ்கார்பியோ எலக்ட்ரிக் நிறுவனம் சொந்தமாக மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிக்கவிருப்பதை பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அப்போதுதான் மின்சார மோட்டார் சைக்கிளின் முதல் தோற்றமும் வெளியானது.
இதைச் சுட்டிக்காட்டிய திரு கோ, பிரதமர் லீக்கும் டாக்டர் பாலகிருஷ்ணனுக்கும் எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பை அறிமுகப்படுத்தியதில் பெருமையடைகிறோம் என்று கூறினார்.