பாலஸ்டியர் ரோட்டில் இருக்கும் ஷா பிளாசாவில் ஒழுங்குபடுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த 30 வயது இந்திய ஆடவர் உயிரிழந்தார்.
360, பாலஸ்டியர் ரோட்டில் உள்ள கட்டடத்தில் நேற்று முன்தினம் முதல் தளத்திலிருந்து, பிரிக்கும் பலகை வழியாக ‘கீழ்த்தளம் ஒன்றில் (Basement 1)’ அவர் விழுந்ததாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. அந்த முகவரி ஷா பிளாசாவின் முகவரி என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஊழியர் ‘எக்ஸ்பிரஸ் 21’ நிறுவனத்தால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது. கட்டடங்களில் மின்னியல் பொறியியல் மற்றும் கட்டமைக்கப்பட்ட கம்பிவடம் அமைப்பது உள்ளிட்ட பணிகளை அந்த நிறுவனம் செய்து வருகிறது.
அந்த வேலையிடத்தில் அனைத்துப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மனிதவள அமைச்சு, விசாரணை நடைபெறுவதாகத் தெரிவித்தது.
உயரத்திலிருந்து கீழே விழுந்து இறந்துபோன ஊழியர்களின் எண்ணிக்கை 2009ஆம் ஆண்டில் 24 ஆக இருந்தது. கடந்த ஆண்டு 8ஆகக் குறைந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் உயரத்திலிருந்து விழுந்து மாண்டுபோனோரின் எண்ணிக்கை குறைந்ததற்கு, அரசாங்கம், தொழில்துறைப் பங்காளிகள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வும் வழங்கப்பட்ட பயிற்சிகளும் முக்கிய காரணங்களாக அமைந்தன.
உயரங்களில் மேற்கொள்ளப்படும் அபாயம் நிறைந்த பணிகளைக் கையாள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகள் கடந்த ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதிக எண்ணிக்கையிலான ஆய்வுகளை மனிதவள அமைச்சு மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் மாதம் 25 நிறுவனங்களில் 300 பரிசோதனைகளை மனிதவள அமைச்சு மேற்கொண்டது. அதனையடுத்து நான்கு இடங்களில் வேலைகளை நிறுத்த அமைச்சு ஆணையிட்டதுடன், மொத்தம் $91,000 அளவிலான 80 அபராதங்களும் விதிக்கப்பட்டன.