சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய சொகுசு பயணக் கப்பலின் நீச்சல் குளத்தில் பத்து வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்தான்.
லங்காவியின் ‘ஸ்டார் குரூஸ் ஜெட்டி’ எனும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘ஜென்டிங் டிரீம்’ எனும் அந்தக் கப்பலில் நேற்று (நவம்பர் 18) இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
கப்பலின் நீச்சல் குளத்தில் சிறுவன் அசைவின்றிக் கிடந்ததாக ‘டிரீம் குரூசஸ்’ நிறுவனத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
கடவுச்சீட்டு தகவல்களைக்கொண்டு சிறுவன் சிங்கப்பூர் குடிமகன் என்பது உறுதிசெய்யப்பட்டது.
கப்பலில் இருந்த மருத்துவ உதவிக்குழு இதய சுவாசமூட்டல் உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளித்தபோதும் சிறுவனை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று பேச்சாளர் குறிப்பிட்டார்.
“விசாரணையில் அதிகாரிகளுடன் உதவிவருவதுடன், ‘டிரீம் குரூசஸ்’ சிறுவனின் குடும்பத்தாருக்கும் தேவையான உதவிகளைச் செய்துவருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
அந்தச் சிறுவனின் பெயர் ஹெங் காய் லுன் ஆலன் என்று மலேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா குறிப்பிட்டது.
தாயார் மற்றும் நண்பருடன் அந்தச் சிறுவன் மூன்று நாள் சுற்றுப்பயணமாக அந்தக் கப்பலில் சென்றதாகக் கூறப்பட்டது.
கப்பல் சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது. நேற்று காலை மலேசியாவின் லங்காவியில் அது நிறுத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பிலான அவசர அழைப்பு நேற்றிரவு 7.30 மணிக்குக் கிடைத்ததாக பாடாங் மாட்ஸிராட் காவல் நிலையம் தெரிவித்தது.
சிறுவன் குளத்தில் மூழ்கியபோது கப்பலில் இருந்தவர்களால் காப்பாற்ற முடியாமல் போனதாக காவல் ஆய்வாளர் முகமது இக்பால் குறிப்பிட்டார்.
சிறுவனின் உடல் சுல்தானா மலிஹா லங்காவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
சுமார் 3,000 பயணிகளுடன் சென்ற அந்தக் கப்பல், நேற்றிரவு 10.30 மணியளவில் புக்கெட்டுக்கு கிளம்பிச் சென்றது.