அலோய்ஷியஸ் பாங்கின் மரணம் தொடர்பில் இரண்டு ராணுவ அதிகாரிகளுக்கு அபராதம்

அலோய்ஷியஸ் பாங்கின் மரணம் தொடர்பில் இரண்டு ராணுவ அதிகாரிகளுக்கு அபராதம்

2 mins read
e1c853ef-8fd6-463e-b8ef-7cf7c91f13c0
படம்: அலோய்ஷியஸ் பாங்கின் இன்ஸ்டகிராம் -

நடிகர் அலோய்ஷியஸ் பாங்கின் மரணத்துக்குக் காரணமான சம்பவத்தில் தங்களது பங்கு குறித்து ராணுவ நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட இரண்டு வீரர்களுக்கு இன்று (நவம்பர் 19) தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்த இரு வீரர்களும் அந்த நேரத்தில் ஹவிட்சர் கவச வாகனத்தில் திரு பாங்குடன் இருந்தனர்.

35 வயது ராணுவ நிபுணர் 2 (எம்இ2) இவான் டியோ கீ சியாங், 31 வயதான மூன்றாம் சார்ஜன்ட் (என்எஸ்) ஹுபெர்ட் வா யுன் டெங் ஆகிய இருவரும் ஹவிட்சரின் துப்பாக்கி உருளை நகர்ந்தபோது திரு பாங் பாதுகாப்பான இடத்தில் இருப்பதை உறுதிசெய்யவில்லை.

அந்தச் சம்பவத்தில் கடுமையாகக் காயமடைந்த திரு பாங், பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

திரு வாவுக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதனைக் கட்டத் தவறினால் அவர் 40 நாட்களுக்குக் காவலில் வைக்கப்படுவார். மூன்றாம் சார்ஜன்ட் பதவியிலிருந்து கார்ப்பரலாக அவர் பதவியிறக்கம் செய்வதையும் நீதிபதி ஒப்புக்கொண்டார்.

திரு டியோவுக்கு $7,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதனைக் கட்டத் தவறினால் அவர் 35 நாட்களுக்குக் காவலில் வைக்கப்படுவார்.

கிராஞ்சி முகாம் IIல் உள்ள ராணுவ நீதிமன்ற வளாகத்தில் ராணுவ உடையில் இருந்த அவ்விருவரிடமும் அவர்கள் மீதான குற்றச்சாட்டு இன்று காலை வாசித்துக் காட்டப்பட்டது.

முழுநேர ராணுவ தொழில்நுட்பர் டியோ, துப்பாக்கி ஆணை அதிகாரி வா ஆகிய இருவரும் தங்கள் மீது குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.

சிங்கப்பூர் ஆயுதப்படைச் சட்டத்தின்கீழ் கீழ்ப்படியாமையின் தொடர்பில் ஒன்று, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய விதத்தில் கவனக்குறைவாக இருப்பதன் தொடர்பில் இரண்டு என மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகளை திரு டியோ எதிர்கொண்டார்.

குற்றவியல் சட்டத்தின்கீழ், மரணம் விளைவிக்கக்கூடிய விதத்தில் கவனக்குறைவாக இருந்தது, சிங்கப்பூர் ஆயுதப்படைச் சட்டத்தின்கீழ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய விதத்தில் கவனக்குறைவாக இருந்தது என மொத்தம் இரண்டு குற்றச்சாட்டுகளைத் திரு வா எதிர்நோக்கினார்.

தயார்நிலை தேசிய சேவையாளரான 28 வயது பாங், நியூசிலாந்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹவிட்சர் கவச வாகனத்தின் துப்பாக்கி உருளைக்கும் அதன் உட்புற அறைக்கும் இடையில் சிக்கிக்கொண்டதில் படுகாயமடைந்தார்.

சிங்கப்பூருக்கு வெளியில் நிகழ்ந்த சம்பவம் என்பதால் பாங்கின் மரணம் தொடர்பிலான விசாரணை அதிகாரம் சிங்கப்பூர் போலிசாருக்கு இல்லை.

சிங்கப்பூர் ஆயுதப் படையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவ்விரண்டு வீரர்கள் மீதும் வழக்குத் தொடுக்க ராணுவத் தரப்பு முடிவுசெய்தது.

நீதிபதி, லெஃப்டினன்ட் கர்னல் (தேசிய சேவை) ஷான் ஹோ சி மிங், மேஜர் குவாக் லின் ஹியன், மேஜர் ஓங் ஸி ஜுன் ஆகியோர் இன்றைய ராணுவ விசாரணைக் குழுவில் அங்கம் வகித்தனர். தற்காப்பு அமைச்சின் சட்ட சேவைகளின் இயக்குநரான தலைமை ராணுவ வழக்கறிஞர் டியோ ஆய் லின் ராணுவத் தரப்பில் வாதாடினார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity