- கி. ஜனார்த்தனன்
ஊன்றுகோல்களின் துணைகொண்டு நடமாட வேண்டியுள்ள பயனியர் தொடக்கப்பள்ளி மாணவன் துர்கேஸ்வரன், இன்று தனது தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டபோது ஒரு புன்முறுவலுடன் காணப்பட்டார். ‘ஸ்பாஸ்டிக் டைப்ளெஜியா’ என்ற நரம்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ள துர்கேஸ்வரன் கிருஷ்ணன், தனக்கு ஏற்பட்ட பல சிரமங்களுக்கிடையே தனது தொடக்கப்பள்ளி கல்வியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
துர்கேஸ்வரனுக்கு படிக்கட்டுகள் ஏறுவது கூட சுலபமான ஒன்று அல்ல. மழைக்காலத்தில் வழுக்கி விழும் அபாயம்கூட இருக்கும். சிற்றுண்டி நேரத்தின்போது இங்குமங்குமாக ஓடும் மாணவர்களால் மோதப்படும் நிலை வேறு.
இப்படி தினசரி வாழ்க்கையில் சிற்சில இடையூறுகள் இருந்துவர, அவற்றை மனவுறுதியுடன் எதிர்கொண்டார் துர்கேஸ்.
துர்கேஸ்வரன் ஒரு வயதாக இருந்தபோது நடக்கமுடியாமல் போனதாக அவரது தந்தை சேதுராமன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
துர்கேசுக்குக் கிட்டத்தட்ட ஆறு வயதாக இருந்தபோது இந்தியாவில் அறுவை சிகிச்சை நடந்தது.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கே கே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததாகவும் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றும் திரு கிருஷ்ணன் கூறினார்.
துர்கேஸின் உடற்குறையால் வேலையிலிருந்து விலகி இல்லத்தரசியானார் அவரது தாயார் திருமதி நங்கை. தம் மகனை முதன்முதலில் பள்ளியில் சேர்த்தபோது பயந்து கொண்டே இருந்ததாக அவர் கூறினார்.
“ஆனால் பள்ளிக்கூடம் துர்கேசுக்காக தரைத்தளத்தில் வகுப்பறையை ஒதுக்கியது முதல் பேருந்துச் சேவை ஏற்பாடு செய்தது வரை சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து தந்தது. இவற்றை நாங்கள் மறக்கவே மாட்டோம்,” என்றார் திருமதி நங்கை, உருக்கத்துடன்.
வகுப்பில் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதில் ஆர்வத்துடன் ஈடுபடுவதாக அவரது வகுப்பாசிரியர் திருவாட்டி இயோ பெய் சூ, 50, தெரிவித்தார்.
“எப்போதும் மகிழ்ச்சியுடனும் நேர்மறையாகவும் துர்கேஸ் வகுப்புக்கு வருவார். சக மாணவர்களுடன் அன்புடன் பேசிப் பழகுவார். அறிவியல், கணக்கு ஆகியவற்றில் மிகவும் ஆர்வம் உடையவர். அவரின் உடற்குறை, எந்த விதத்திலும் அவரிடம் காணப்படும் உற்சாகத்தை மட்டுப்படுத்துவதாக நமக்குத் தோன்றாது,” என்றார் திருவாட்டி இயோ.
எதையுமே சுயமாகச் செய்ய வேண்டும் என்ற மனப்போக்கு அவருள் வேரூன்றி இருப்பதாகக் கூறினார் அவரது தமிழாசிரியர் திருவாட்டி மெஹ்ராஜ் பேகம், 44.
கற்றலைப் பொறுத்தவரை அவர் தமிழ்மொழியின்மீது அதிக ஆர்வம் உள்ளவர் என்றும் கூறுகிறார் திருவாட்டி பேகம்.
எதிர்காலத்தில் சொந்த வர்த்தகம் ஒன்றைத் தொடங்குவதே தன் லட்சியம் என்று கூறினார் துர்கேஸ். கார்களையும் உடற்குறையுள்ளோருக்கான பொருட்களையும் தயாரித்து விற்க ஆசைப்படுவதாகத் தெரிவித்தார்.
உடற்குறையுள்ளோரின் சிரமத்தைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதால் அவர்களுக்குத் தேவையான வசதியை ஏற்படுத்தித் தர தன்னால் இயன்றதை செய்ய விரும்புவதாகக் கூறினார் மனதில் உரம் கொண்டுள்ள துர்கேஸ்.