செங்காங்கில் உள்ள கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 37 வயது ஊழியர் மரணமடைந்தார்.
தடுப்புகளுக்கும் சுழலும் பாரந்தூக்கிக்கும் இடையே சிக்கி அவர் உயிரிழந்ததாக நேற்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இறந்தவர், பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்.
எண் 339 ஆங்கர்வேல் ரோட்டில் உள்ள இந்த கட்டுமானத் தளத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் வீடுகளைக் கட்டி வருகிறது. இதன் சொத்து மேம்பாட்டாளர் ஹி ஷான் என்றும் ஒப்பந்தக் குத்தகைதாரர் கென்-பால் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை 9.00 மணியளவில் விபத்து நிகழ்ந்தது. படுகாயம் அடைந்த ஊழியர் சுய நினைவை இழந்த நிலையில் செங்காங் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தை மனிதவள அமைச்சும் போலிசாரும் விசாரித்து வருகின்றனர்.
கென்-பால் நிறுவனத்துடன் தொடர்புகொண்டபோது சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டது.
இவ்வாண்டில் இதே பகுதியில் இரண்டாவது முறையாக உயிர்ப் பலி விபத்து நிகழ்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 327சி ஆங்கர்வேல் ரோட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 36 வயது இந்திய நாட்டு ஊழியர் மரணமடைந்தார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity