தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எற்படுத்திய நிலையில், எதிர்பாராத திருப்பமாக இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இன்று (டிசம்பர் 6) அதிகாலை போலிசார் 'என்கவுன்டர்' முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சென்ற மாதம் 27ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலம் ஒன்றின் கீழ் பிரியங்கா ரெட்டி எனப்படும் அந்த 26 வயது பெண் உயிரோடு கொளுத்தப்பட்டார். முற்றிலும் கருகிய நிலையில் அவரது சடலம் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த அதே பகுதியில் விசாரணைக்காக குற்றவாளிகள் நால்வரும் இன்று அதிகாலை 3 மணி அளவில் அழைத்துச்செல்லப்பட்டனர்.
அப்போது, அதில் ஒருவர் தப்பித்துச்செல்ல மற்றவர்களுக்கு கண் ஜாடை காட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து நால்வரும் போலிசாரைத் தாக்கிவிட்டு அவர்களின் ஆயுதங்களை எடுத்து தப்பிச்செல்ல முயன்றதாகவும் அதனால் தற்காப்புக்காக குற்றாவளிகளைத் தாங்கள் சுட்டதாகவும் போலிசார் கூறினர். முன்னதாக, தப்பிக்கும் முயற்சியில் தங்களை நோக்கி நால்வரும் கற்களை வீசியதாகவும் போலிசார் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்னகேசவலு ஆகிய மூவரின் வயது 20. நான்காமவரான முகம்மது ஆரிஃப்பின் வயது 26.
இந்த என்கவுன்டர் சம்பவத்துக்கு முக்கிய காரணமாக இருந்த சைபராபாத் போலிஸ் ஆணையர் சஜ்ஜனாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதற்கு முன்பு அவர் வாரங்கல்லில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய 2 பேரை “என்கவுன்டர்” செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு பேரும் 'என்கவுன்டர்' முறையில் கொல்லப்பட்ட தகவல் இன்று காலை காட்டுத் தீ போல வேகமாகப் பரவியது. பாலியல் குற்றவாளிகள் கொல்லப்பட்டதை இந்தியாவில் பெரும்பாலானோர் வரவேற்றனர். குறிப்பாக, தெலுங்கானாவில் பெண்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
பலாத்காரத்துக்குப் பலியான பிரியங்கா ரெட்டியின் தந்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “என் மகள் இறந்து பத்து நாட்களாகிவிட்டன. குற்றவாளிகளை 'என்கவுன்டர்' செய்ததற்காக போலிசுக்கும் அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என் மகளின் ஆத்மா இனிமேல் சாந்தியடையும்,” என்றார்.
இந்நிலையில் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்ட விதம் குறித்து உடனடி விசாரணைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் குறித்து ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா, “குற்றவாளிகள் ஒழிக்கப்பட்டது மகிழ்ச்சிக்குரியது என்றபோதிலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட்டிருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்,” என்றார்.
நிர்பயாவின் பெற்றோர்: இந்த மகிழ்ச்சி எங்களுக்கும் வேண்டும்
2012ஆம் ஆண்டு டெல்லியில் ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி, தெலுங்கானா என்கவுன்டரை வரவேற்றள்ளார்.
“என்கவுன்டர் செய்த போலிஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு போலிஸ் மீது பயம் வர வேண்டும். இன்றைய நாளில் குற்றவாளிகளுக்கு இதுபோன்ற தண்டனை அவசியப்படுகிறது.
என் மகளுக்குக் கொடுமை இழைத்தவர்களைத் தண்டிக்க நான் ஏழு ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன். ஒவ்வொரு நீதிமன்றமாக அழைந்துவருகிறேன். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகிறேன். ஆனால், நீதிமன்றமோ அவர்களுக்கு மனித உரிமை உண்டு என்பதால் தூக்கிலிட முடியாது என்கிறது,” என்றார் ஆஷாதேவி.
நிர்பயாவின் தந்தை கூறும்போது, “இந்த என்கவுன்டர் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் தினமும் செத்துக்கொண்டு இருக்கிறோம். தெலுங்கானா பெண்ணின் பெற்றோருக்குக் கிடைத்த நிம்மதி எங்களுக்கும் வேண்டும்,” என்றார்.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. இங்குள்ள போலிசாரும் ஹைதராபாத் போலிஸ் போன்று உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்,” என்றார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity