புதிய தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் (டிஇஎல்) ரயில் பாதையில் முதல் மூன்று நிலையங்கள் அடுத்த மாதம் 31 (ஜனவரி 31) ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (டிசம்பர் 11) தெரிவித்தது.
உட்லண்ட்ஸ் நார்த், உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சவுத் ஆகிய நிலையங்களுக்கிடையே ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2வரை அனைத்து பயணிகளும் இலவசப் பயணங்களை மேற்கொள்ளலாம்.
டிஇஎல் ரயில் நிலையங்களுக்கு அருகில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சமயத் தலங்கள் போன்றவற்றை பயணிகள் எளிதில் கண்டறியும் விதத்திலான வட்டார வரைபடம் பயணிகள் கண்ணில் படும் இடங்களில் வைக்கப்படும்.
முதியோர் ரயில்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவதால் அவர்கள் நிலையத்துக்குள் எளிதில் நடமாட ஏதுவாக வழிகாட்டிப் பலகைகள் இருப்பது அவசியம் என்று உட்லண்ட்ஸ் சவுத் நிலையத்தை இன்று பார்வையிட்ட போக்குவரத்து அமைச்சின் மூத்த நாடாளுமன்ற செயலாளர் பே யாம் கெங் கூறினார்.
பெரிய எழுத்துகள், தெளிவான சின்னங்கள் போன்றவை மூத்த பயணிகளுக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றார் அவர்.
புதிய, பயன்பாட்டுக்கு இலகுவான ரயில் கட்டமைப்பு வரைபடம் ஒன்றை அவர் இன்று வெளியிட்டார். அதில் நிலையங்கள், ரயில் கட்டமைப்பு வரைபடம் சிங்கப்பூரின் நில அமைப்பை மிகவும் ஒத்திருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.
இந்தப் புதிய வரைபடத்தைப் பார்க்கும் பயணிகள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து செல்ல வேண்டிய இடத்துக்கான பயணத்தை எளிதில் திட்டமிட முடியும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
நிலையங்களின் பெயர்கள் போன்றவையும் எளிதில் வாசிக்கக்கூடிய விதத்தில் புதிய வரைபடம் உள்ளது. தற்போது ரயில் நிலையங்களில் உள்ள வரைபடத்துக்குப் பதிலாக இந்தப் புதிய படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மாற்றப்படும் என்றது ஆணையம்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் எம்ஆர்டி கட்டமைப்பின் புதிதாக வடிவமைக்கப்பட்ட வரைபடம் ஒன்று வடிவமைப்பாளர் கிளிஃப் டான் என்பவரால் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. அது சமூக ஊடகப் பயனாளிகளின் கவனத்தை ஈர்த்ததையடுத்து, புதிய வரைபடம் பற்றிய தகவலை ஆணையம் வெளியிட்டது.
புதிய வரைபட வடிவமைப்பின்போது வேறு நாடுகளின் ரயில் கட்டமைப்பு வரைபடங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன் திரு டானுடனும் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு முதல் பல கட்டங்களாக செயல்பாட்டுக்கு வரவுள்ள டிஇஎல் ரயில் பாதை, 2025ஆம் ஆண்டில் முழுமையாகச் செயல்படும்.
சிங்கப்பூரின் ஆறாவது எம்ஆர்டி பாதையான இது 43 கி.மீ. தூரத்தில் 32 புதிய நிலையங்களைக் கொண்டிருக்கும்.
இந்தப் பாதையில் ஏழு சந்திப்பு ரயில் நிலையங்கள் அமையும். ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மற்ற ஐந்து எம்ஆர்டி பாதைகள் இந்தப் புதிய பாதையுடன் அந்த ஏழு சந்திப்பு நிலையங்களில் இணைக்கப்படும்.
தொடக்கத்தில் தினமும் சுமார் 500,000 பயணிகள் இந்தப் பாதையைப் பயன்படுத்துவர் என்றும் காலப்போக்கில் சுமார் ஒரு மில்லியன் பயணிகள் இதனைப் பயன்படுத்துவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity