குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய பயணமாக இப்பகுதி
களுக்கு செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது குடிமக்களுக்குப் பயண அறிவுரை வெளியிட்டுள்ளன.
“அம்மாநிலங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ஒரு சில விமான, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், அங்கு பயண நிலவரம் சிக்கலாக உள்ளது,” என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று கூறியது.
ஆக அண்மைய நிலவரம் குறித்து பயண முகவர்களிடம் சிங்கப்பூரர்கள் கேட்டு தெரிந்துகொள்ளுமாறு அமைச்சு அறிவுறுத்தியது.
பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய மூன்று அண்டை நாடுகளில் சமய ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை அளிக்க வகைசெய்யும் மசோதாவை இந்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை ‘சமய ரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தும் நடவடிக்கை’ எனக் கூறி, அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அசாமில் கடந்த வியாழக்கிழமை முதல் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அன்று போலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனா்.
மற்றொரு சம்பவத்தில் போலிசார் நடத்திய தடியடியில் காயமடைந்த ஆடவர் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதையடுத்து அசாம் மாநிலம், கௌஹாத்தி நகரில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தளர்த்தப்பட்டது.
இருந்தபோதிலும் அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களிலும் கைபேசி இணைய சேவை முடக்கம் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுராவிவில் கடந்த சில நாட்களாக வன்முறை நடந்தேறியதை அடுத்து அங்குள்ள ஒரு சில பகுதிகளில் நேற்று அமைதி நிலவியபோதும் மேற்கு வங்கம், டெல்லி, உத்தரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் போராட்டக்காரர்கள் சாலை, ரயில்களை மறித்து போராட்டம் நடத்தினர்.
அம்மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தின் ஒரு பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்தனர்.
இதற்கிடையே, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக முழக்கமிடும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மிதமிஞ்சிய பலப்பிரயோதத்தைப் பயன்படுத்த வேண்டாம் என மனித உரிமை அமைப்பான ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா’ கேட்டுக்கொண்டுள்ளது.