பாதசாரிகள் சாலையக் கடக்கும்போது கைபேசிகளைப் பயன்படுத்துவது குற்றமல்ல என்று போலிசார் நேற்று (டிசம்பர் 17) இரவு தங்களது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டனர்.
ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது கைபேசிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சாலையைக் கடக்கும்போது கைபேசிகளைப் பயன்படுத்தினால் $1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என இணையத்தில் வலம் வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக போலிசார் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
“கைபேசி உள்ளிட்ட கையடக்க சாதனங்களின் பயன்பாட்டை, சாலையைக் கடக்கும்போது பயன்படுத்தாமல் இருக்குமாறு பாதசாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய போலிசார், “அத்தகைய பயன்பாடு சாலையில் வாகனங்கள் செல்வதைக் கண்காணிப்பதிலிருந்து கவனத்தைச் சிதறச் செய்யும். பாதசாரிகள் எல்லாச் சமயங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்களது பாதுகாப்பு, சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று போலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
சாலையைக் கடக்கும்போது பாதசாரிகள் கையடக்க தொடர்பு கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதுடன் போக்குவரத்து சைகைகள், விதிகளுக்குட்பட்டு நடக்கவும் போலிசார் நினைவூட்டினர்.
கடந்த மாதம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட காணொளி ஒன்றில், அவசர மருத்துவ வாகனங்களுக்கு வழிவிடுதல், தனிநபர் நடமாட்டச் சாதனங்களை முறையாகப் பயன்படுத்துதல் ஆகியவையும் வலியுறுத்தப்பட்டன.
அவசர மருத்துவ வாகனத்துக்கு வழிவிடாத ஓட்டுநர்களுக்கு $200 வரை அபராதமும் 4 தகுதியிழப்புப் புள்ளிகளும் வழங்கப்படும்.
தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோர் அதற்கென ஒதுக்கப்பட்ட பாதைகளில் குறிப்பிட்ட வேகத்துக்குள் பாதுகாப்பாக ஓட்ட வேண்டும் என்று நினைவுறுத்தப்பட்டனர்.
பொதுமக்களைக் கலவரப்படுத்தக்கூடிய பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும் போலிசார் கேட்டுக்கொண்டனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity