சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் முழுநேர தேசிய சேவையாளரான 21 வயது பிரைவேட் ஜோஷுவா குவெக் ஷு ஜிக்கு புதன்கிழமை அன்று தைவானில் நடந்த சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தனிப்பட்ட முறையில் நடத்தும் வான்குடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது முதுகுத் தண்டில் காயம் அடைந்துள்ளார்.
பிரைவேட் குவெக் உடனடியாக அங்கிருந்து அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படார். அங்கு அவருக்கு வியாழக்கிழமை காலையில் முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று தற்காப்பு அமைச்சு இன்று (டிசம்பர் 20) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
நேற்று அறுவை சிகிச்சை எவ்வித சிக்கலுமின்றி நடைபெற்றதாகவும் தற்பொழுது அவருடைய நிலைமை சீராக இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
அவர் தற்பொழுது தைவானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு முகுதுத் தண்டு காயத்தைச் சரிசெய்ய மேலும் சிகிச்சை திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
அவருடைய மருத்துவ சிகிச்சையை ஒருங்கிணைக்க சிங்கப்பூரிலிருந்து நரம்பியல் நிபுணர் ஒருவர் தைவானுக்கு விமானம் மூலம் சென்றிருப்பதாகவும் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
திரு குவெக்கின் குடும்பத்தாரும் விமானம் மூலம் தைவானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சு கூறியது.
காயமடைந்த திரு குவெக் தமது பெற்றோர் இருவருடனும் பேசியதாகவும் அவர் தெளிவான சிந்தனையுடன் இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
பிரைவேட் குவெக் மேலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிமையை வேண்டுவதாக அறிக்கை தெரிவித்தது.
ஆயுதப்படைகள் பிரைவேட் குவெக்கிற்கும் அவரது குடும்பத்துக்கும் முழு ஆதரவு வழங்கி தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அறிக்கை தெளிவுபடுத்தியது.
சம்பவம் குறித்து ஆயுதப் படைகள் விசாரணை நடத்துவதாகவும் பயிற்சி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity