ஆர்ச்சர்ட் சாலையில் லக்கி பிளாசா கடைத்தொகுதிக்கு வெளியே உள்ள துணைச்சாலையில் நேற்று பிற்பகல் கார் ஒன்று மோதியதையடுத்து பெண் பாதசாரிகள் இருவர் உயிரிழந்தனர். மேலும் சிலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
கடைத்தொகுதிக்கு வெளியே இருந்த உலோக வேலியை உடைத்துக்கொண்டு சென்ற அந்த கார், அங்கிருந்தவர்களை மோதிவிட்டு கடைத்தொகுதி அருகே உள்ள துணைச்சாலையில் நின்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
ஆர்ச்சர்ட் சாலையில் கார் ஒன்றும் ஆறு பெண் பாதசாரிகளும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து மாலை 4.58 மணிக்குத் தனக்கு தகவல் அளிக்கப்பட்டதாக போலிஸ் தெரிவித்தது.
“விபத்தில் காயமடைந்த 29க்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட இரு பாதசாரிகள் சுய
நினைவற்ற நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயங்கள் காரணமாக அவர்கள் உயிரிழந்தனர்.
“30க்கும் 43 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பாதசாரிகள் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
“மரணத்தை விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் காரை ஓட்டிய 64 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். விபத்து குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது,” என்று போலிஸ் தெரிவித்தது.
எண் 304 ஆர்ச்சர்ட் சாலையில் உதவி கோரி மாலை 5 மணியளவில் தனக்கு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு ஐந்து அவசர மருத்துவ வாகனங்களை அது அனுப்பி வைத்தது.
விபத்தில் காயமடைந்த அறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களில் நால்வருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் அது கூறியது. விபத்தில் சிக்கிய அறுவரும் பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள் என அறியப்படுகிறது.
கடைத்தொகுதிக்கு அருகே உள்ள துணைச்சாலையில் கறுப்பு நிற கார் ஒன்று சேதமடைந்து இருந்ததைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் காட்டின. அந்த காருக்கு அருகில் இருவர் சாலையில் கிடப்பது அவற்றில் தெரிந்தது. அந்த காருக்குக் கீழ் ஒருவர் சிக்கிக்கொண்டது படத்தில் தெரிந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த சிலருக்கு மற்ற சிலர் உதவி வழங்குவதை இணையத்தில் வலம் வரும் காணொளி ஒன்று காட்டியது.
துணைச்சாலைக்கு மேலே உள்ள உலோக வேலி மோசமாக சேதமடைந்திருப்பதை அக்காணொளி காட்டியது.
வெளிநாட்டு ஊழியர்கள், குறிப்பாக பிலிப்பீன்சை சேர்ந்த இல்லப் பணிப்பெண்கள் மத்தியில் லக்கி பிளாசா பிரபலமாக உள்ளது.
கடைத்தொகுதிக்கு வெளியே பிலிப்பீன்ஸ் ஊழியர்கள் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது கார் மோதியதாக சம்பவ இடத்திற்கு அருகே இருந்த இல்லப் பணிப்பெண்கள் இருவர் கூறினர்.
காருக்கு அடியில் சிக்கிக்கொண்ட பெண்ணை மீட்க அங்கிருந்த வழிப்போக்கர்கள் சிலர் காரைத் தூக்கியதாக பணிப்பெண் ரோஸ்மேரி ரயிஸ் கூறினார்.
“விபத்து நிகழ்ந்தபோது பெரிய சத்தம் கேட்டது. நாங்கள் அனைவரும் பயந்து போய்விட்டோம். அங்கிருந்தவர்கள் அனைவரும் உதவி வழங்க விரைந்தனர். காயமடைந்தவர்களில் சிலருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சையும் வழங்கப்பட்டது,” என்றார் அவர்.