ஆஸ்திரேலிய காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டு வர பாடுபட்ட தீயணைப்பாளர்களில் ஒருவர், நேற்று உயிரிழந்தார். அத்துடன் மேலும் இருவருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன.
அதிக வெப்பத்தாலும் வேகமான காற்றால் பரவும் காட்டுத்தீயாலும் ஆயிரக்கணக்கான மக்களும் சுற்றுப்பயணிகளும் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியை விட்டு வெளியேறும் நெருக்கடி நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
அனல் காற்றால் நாடு முழுவதும் கடுமையான காட்டுத்தீச் சம்பவங்கள் மீண்டும் ஏற்படும் வாய்ப்புள்ளது.
நிலைமை மேலும் மோசமடைவதற்குள் பிரபல ‘ஈஸ்ட் ஜிப்ஸ்லேண்ட்’ பகுதியிலிருந்து வெளியேறும்படி கிட்டத்தட்ட 30,000 சுற்றுப்பயணிகளுக்கு நேற்று முன் தினம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அப்பகுதியின் வெப்பநிலை 42 டிகிரி செல்சியசை எட்டிய நிலையில், காட்டுத்தீ ஏற்பட்டு முக்கிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது. இதனால் ‘ஈஸ்ட் ஜிப்ஸ்லேண்ட்’ பகுதியின் குடியிருப்பாளர்களும் சுற்றுப்பயணிகளும் வெளியேற முடியாமல் போனது.
அப்பகுதியில் மட்டும் பல தீச்சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சில மிக மோசமாக இருப்பதால் நூற்றுக்கணக்கான தீயணைப்பாளர்கள் பின்வாங்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கரையோரமாக உள்ள காட்டுப் பகுதியில் இப்போதுள்ள நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்பட்டது. 2009ஆம் ஆண்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் கிட்டத்தட்ட 180 பேர் உயிரிழந்ததை அடுத்து இப்போதைய நிலைமையும் மோசமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள அபாய நிலையில் இதுவரை குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் தங்களின் வீடுகளையும் இழந்துள்ளனர்.
பல மாதங்களாக காட்டுத்தீச்சம்பவங்களால் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவில் இப்போது இந்த அவசர நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களைப் பாதித்துள்ள காட்டுத்தீச் சம்பவங்களால் உலக வெப்பமயமாதலின் தாக்கம் குறித்த விவாதமும் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, இன்று சிட்னியின் மேற்குப் பகுதிகள் சிலவற்றில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியசை எட்டக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 100 புதர் மற்றும் புல் தொடர்பான தீச்சம்பவங்கள் நேற்று சிட்னியில் பதிவாகின. சிட்னியின் வடமேற்குப் பகுதியில் எரிந்துகொண்டிருக்கும் ராட்சச தீ ஒன்றால் 1.2 மில்லியன் ஏக்கர் அளவு இடம் நாசமாகியுள்ளதாகக் கூறப்பட்டது. அப்பகுதி சிங்கப்பூரின் அளவைக் காட்டிலும் ஏழு மடங்கானது.