ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து நேற்று 176 பேருடன் உக்ரேனின் கியவ்வை நகரை நோக்கிப் புறப்பட்ட உக்ரேனிய விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து அனைவரும் கொல்லப்பட்டனர்.
உக்ரேன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த போயிங் 737 ரக விமானம் மேலே கிளம்பிய சிறிது நேரத்தில் அதில் கோளாறு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இதன் காரணமாக டெஹ்ரான் விமான நிலையத்துக்கு அருகே அது கீழ் நோக்கிப் பாய்ந்து நொறுங்கியது.
சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர் என்று ஈரானிய சிவில் விமான போக்குவரத்து நிறுவனத்தின் பேச்சாளர் ரேஸா ஜஃபார்ஸாடே தெரிவித்தார்.
“விமானம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததால் பயணிகளில் சிலரை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் மீட்புப் பணி ஊழியர்களை அவசரமாக அனுப்பி வைத்தோம்,” என்று ஈரானிய அவசரகால சேவைகளின் தலைவர் பிரோசைன் கோலிவந்த் கூறினார்.
ஆனால் நெருங்க முடியாத அளவுக்கு தீ கடுமையாக இருந்ததால் ஒருவர்கூட உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று பின்னர் அவர் சொன்னார்.
மீட்புப் பணியில் 22 ஆம்புலன்சுகளும் நான்கு பேருந்து ஆம்புலன்சுகளும் ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டன.
விமானத்தில் பயணம் செய்த 176 பயணிகளில் 82 பேர் ஈரானியர்கள் என்றும் 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் உக்ரேனிய அமைச்சர் ஒருவர் சொன்னார்.
சுவீடன், ஆஃப்கானிஸ்தான், பிரிட்டன், உக்ரேன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதில் பயணித்ததாகக் கூறப்பட்டது. பயணிகளில் பாதிப்பேர் ஈரான் குடிமக்கள்.
ஈரானில் உள்ள உக்ரேனிய தூதரகம், விமான இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விபத்து நிகழ்ந்தது என்று முன்பு குறிப்பிட்டது. ஆனால், விமானத்தின் இயந்திரத்தில் தீப்பற்றியதன் காரணமாக விபத்து நிகழ்ந்திருப்பதாக ஈரான் குறிப்பிட்டது.
அந்த விமானம் நல்ல நிலையில் இருந்ததாகவும் விமானப் பணியாளர்கள் மிகுந்த அனுபவம் மிக்கவர்கள் என்பதால் மனிதத் தவறு நேர்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும் உக்ரேனியன் இன்டர்நேஷனல் விமான நிறுவனத்தின் துணைத் தலைவர் ஐஹோர் சோஸ்னோவ்ஸ்கி தெரிவித்தார். கடந்த ஆறாம் தேதி விமானம் சோதிக்கப்பட்டது என்றார் அவர்.
விமானம் கீழே விழுவதற்கு முன்பு தீப்பிழம்பு ஒன்று வேகமாக விண்ணிலிருந்து கீழே விழுவதைக் காட்டும் காணொளி ஒன்று வெளியானது.
தொலைக்காட்சியில் காட்டிய படங்களில் விமானம் பல பாகங்களாக உடைந்து சிதறி எரிந்து கருகிக் கிடந்ததைக் காண முடிந்தது. மற்றொரு பக்கம் முகக்கவசம் அணிந்த மீட்புப் படை ஊழியர்கள் விமானத்திலிருந்து சடலங்களை மீட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் விமானத்தின் தகவல்கள் பதிவாகியுள்ள இரண்டு கருப்புப் பெட்டிகளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை ஆராய்ந்தால் விமானம் விபத்துக்கு உள்ளான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே விமான விபத்து குறித்து தகவல்களை சேகரித்து வருவதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity