இளம்பெண்களையும் விட்டுவைக்காத மார்பகப் புற்றுநோய்; அவர்களுக்குத்தான் அபாயம் அதிகம்

இளம்பெண்களையும் விட்டுவைக்காத மார்பகப் புற்றுநோய்; அவர்களுக்குத்தான் அபாயம் அதிகம்

2 mins read
e74a3ba3-e5ad-4484-bfaa-1fc14ba1dce8
அறுவை சிகிச்சைக்குச் செல்வதற்கு முன்பாக தனது உடல் எப்படி இருந்தது என்பதைப் பதிவு செய்ய விரும்பி புகைப்படம் எடுக்க முடிவு செய்தார் ஜெயஸ்ரீ. படம்: Annabel Law Productions (ALPS)Subsidiary in Guangzhou China -

கீமோதெரபி மருந்துகளால் கூந்தல் உதிர்ந்து, உடல் பருத்து, கண் இமைகளில், புருவத்தில் இருந்த முடிகள்கூட உதிர்ந்த நிலையில் தனது புகைப்படங்களை தமது வலைத்தளப் பதிவில் வெளியிட்டிருந்தார் திருமதி ஜெயஸ்ரீ பிள்ளை.

மூன்றாம் நிலை மார்பகப் புற்றுநோய் திருமதி ஜெயஸ்ரீக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவரது இடது மார்பகத்தை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற பரிந்துரைக்கப்பட்டது. மீண்டும் மார்பகப் புற்றுநோய் தாக்காமல் இருக்கும் பொருட்டு தனது இரண்டு மார்பகங்களையுமே அகற்ற முடிவு செய்தார் ஜெயஸ்ரீ.

இயற்கையாகவே பெரிய மார்பகங்களைக் கொண்டிருந்தார் ஜெயஸ்ரீ. தற்போது மார்பக அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறிய மார்பகங்களை உருவாக்குமாறு மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டார் ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் தணிக்கையாளராகப் பணியாற்றும் அவர்.

அறுவை சிகிச்சைக்குச் செல்வதற்கு முன்பாக தனது உடல் எப்படி இருந்தது என்பதைப் பதிவு செய்ய விரும்பி புகைப்படம் எடுக்க முடிவு செய்தார் ஜெயஸ்ரீ.

மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் புகைப்படக் கலைஞர் அன்னபெல் லா ஆறு பெண்களை 2018ஆம் ஆண்டிலிருந்து புகைப்படம் எடுத்தார்.

"எனக்கு கச்சிதமான உடலமைப்பு இல்லாவிட்டாலும், எனது தோற்றத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தேன்," என்று குறிப்பிட்ட ஜெயஸ்ரீ, தற்போது புகைப்படம் எடுத்தபோது போர்வை மட்டுமே போர்த்தியிருந்தார்.

காப்புறுதி, தாம் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகள் போன்றவை பற்றி தமது வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஜெயஸ்ரீ, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தத் தகவல் உதவும் என்று நம்புகிறார்.

சிங்கப்பூரில் அதிகம் காணப்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடம் பிடித்தாலும் அது பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படக்கூடியது என்ற எண்ணமே நிலவுகிறது.

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஈராண்டுக்கு ஒருமுறை மார்பகப் புற்றுநோய் இருந்தால் அதைக் கண்டுபிடிப்பதற்காக 'மேமோகிராம்' பரிசோதனைக்குச் செல்லுமாறு சுகாதார மேம்பாட்டு வாரியம் அறிவுறுத்துகிறது.

ஆனால், இளையர்களையும் மார்பகப் புற்றுநோய் விட்டுவைப்பதில்லை.

2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஐந்தில் ஒரு பங்கு பெண்களின் வயது 45க்கும் கீழ் என சிங்கப்பூர் புற்றுநோய் பதிவகத்தின் தகவல் குறிப்பிடுகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருப்பதையும் பதிவகத்தின் தரவுகள் காட்டுகின்றன.

தேவைகளை அறிந்து, மார்பகப் புற்றுநோய் அற நிறுவனம் (பிசிஎஃப்), மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆதரவுக் குழுவை 2018ஆம் ஆண்டு நிறுவியது. காலாங்கில் இருக்கும் அவர்களது அலுவலகத்தில் மாதம் ஒரு முறை சந்தித்து சிகிச்சை, தொழில் முன்னேற்றம், குடும்பம் போன்றவை பற்றி உரையாடி வருகிறது அந்தக் குழு.

20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சுய மார்பகப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அந்த அற நிறுவனம் வலியுறுத்துகிறது. நாற்பது வயதுக்குட்பட்டோருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும்போது அது மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

பொதுவான மார்பகப் புற்றுநோய் வகையிலிருந்து மாறுபடும் 'மும்மடங்கு எதிர்மறை மார்பகப் புற்றுநோய்' அரிதானது என்றும் இளம் நோயாளிகள் இதனால் பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

#தமிழ்முரசு #மார்பகப்புற்றுநோய் #இளம்பெண் #ஜெயஸ்ரீபிள்ளை

குறிப்புச் சொற்கள்