சீனாவின் வூஹான் நகருக்கான பயணத்தை சிங்கப்பூரர்கள் தவிர்க்க வேண்டும் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டு உள்ளது.
புதிய வகை கொரோனா கிருமி தொடர்பான நிலவரம் வூஹானுக்கு அப்பால் பெய்ஜிங், தியான்ஜின், குவாங்டோங் போன்ற நகரங்களுக்கும் பரவியதாகக் கூறப்படும் வேளையில் அமைச்சு நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.
சீனாவின் மற்ற நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது சொந்த சுகாதாரத்தில் தங்களது விழிப்புநிலையைத் தொடருமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டுவதாகவும் அந்த அறிவிப்பில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கிருமித் தொற்று சம்பவம் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் சிங்கப்பூர் ஒரு பயண மையம் என்பதால் வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலம் கிருமி தொற்று பரவும் என்ற சந்தேகம் இருப்பதாக அமைச்சு கூறியுள்ளது.
விலங்குகளிடம் நெருக்கத்தைத் தவிர்க்குமாறும் பச்சையான, சரியாக வேகாத இறைச்சியை உண்ணவேண்டாம் என்றும் அமைச்சு நினைவூட்டி உள்ளது. இதற்கிடையே, புதிய கிருமித் தொற்று தொடர்பாக தனது சேவை ஊழியர்களுக்கு இரு முறை மருத்துவ ஆலோசனைகளை வெளியிட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியது.