சீனப் புத்தாண்டையொட்டி சீன குடும்பங்கள் இன்றிரவு ஒன்றுகூடவிருக்கும் நிலையில் வலுவான குடும்ப உறவுகளின் அவசியத்தை பிரதிபலிப்பது இது பொருத்தமான நேரம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
“நல்லது, கெட்டது நிகழும்போது நமக்கு பக்கபலமாக இருப்பது குடும்ப உறுப்பினர்கள்தான். அதனால்தான், ஒன்றாக இணைந்திராத சமயத்திலும், பெரும்பாலான மக்கள் தங்களது குடும்பத்துடன் அணுக்கமான உறவைக் கடைப் பிடிக்கிறார்கள்,” என்று பிரதமர் தமது சீனப் புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“வலுவான குடும்பங்களால் நாடும் வலுவடைகிறது. குடும்பங்கள் ஒன்றுகூடி கொண்டாடும், ஒருவரையொருவர் ஆதரிக்கும், குறிப்பாக, இளைய குடும்பங்கள் அவற்றைத் தொடங்கக்கூடிய ஒரு சமூகமாக சிங்கப்பூர் இருப்பது அவசியம். அதனை நோக்கமாகக் கொண்டுதான் கடந்த ஆண்டு இளைய குடும்பங்களை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் பல நடவடிக் கைகளை அரசாங்கம் அறிமுகம் செய்தது,” என்றார் திரு லீ. பிள்ளைகளை வளர்க்கும்போது ஏற்படும் நிதிச்சுமையைத் தணிக்கும் நோக்கில் பாலர் பள்ளி மானியங்கள் அதிகப்படுத்தப்பட்டன. பெற்றோருக்கும் பராமரிப்பாளர்களுக்கும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளைச் செய்து தரும் நிறு வனங்களுக்கு வரவு-செலவுத் திட்டத்தில் அதிக உதவிகள் அறிவிக்கப்பட்டன.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதும் குழந்தை பெற்றுக்கொள்ளுவதும் அவரவர் சொந்த முடிவு என்பதை தாம் உணர்ந்திருந்தபோதிலும் அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் இளைய தம்பதியினர் தங்களது குடும்ப வாழ்க்கையைத் தொடங்கவும் வளர்ந்துவரும் அவர்களின் குடும்பங்களை ஆதரிக்கவும் உதவும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
“என்னுடைய சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் சிரிப்பொலியைக் கேட்பதைக் காட்டிலும் பெரிய இன்பம் எதுவுமில்லை. குறிப்பாக, சீனப் புத்தாண்டு போன்ற விழா கொண்டாட்டங்களில் இவற்றை அனுபவிக்கலாம்,” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தாவில் வெள்ளம், தாய்லாந்தில் வறட்சி, ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ, ஹாங்காங், மத்திய கிழக்கு, பிரான்ஸ் போன்றவற்றில் கொந்தளிப்பு ஆகியவற்றுக்கு இடையே இவ்வாண்டின் சீனப் புத்தாண்டு பிறப்பதாகக் குறிப்பிட்ட திரு லீ, இந்த நாடுகளில் அமைதி திரும்ப தாம் விரும்புவதாகத் தெரிவித்தார்.
உலகப் பொருளியல் கருத்தரங்கில் பங்கேற்க சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகர் சென்றிருக்கும் பிரதமர், அங்கிருந்து சீனப் புத்தாண்டு செய்தியை வெளியிட்டுள்ளார். நாளை நாடு திரும்பும் அவர் இவ்வாறு வெளிநாட்டில் இருந்து இச்செய்தியை விடுப்பது இதுவே முதல்முறை.
தமது சொந்த குடும்ப ஒன்றுகூடல் விருந்தில் பங்கேற்க இயலாதது துரதிர்ஷ்டமாக இருப்பினும் ஸூரிச்சில் உள்ள சிங்கப்பூரர்களுடன் கொண்டாடும் வாய்ப்பு தமக்குக் கிட்டியிருப்பதாக திரு லீ கூறியுள்ளார். இவ்வாண்டின் சீனப் புத்தாண்டு எலி ஆண்டு.
“எலியிடம் நாம் காணும் சுறுசுறுப்பு, படைப்பாற்றல், புத்திக்கூர் மை போன்றவற்றிலிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாம். இதுபோன்ற அம்சங்கள் எதிர்காலச் சவால்களை வெற்றிகொள்ள, நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் சிறப்பான சிங்கப்பூரை உருவாக்க உதவும்,” என்று கூறிய பிரதமர், எல்லா சிங்கப்பூரர்களுக்கும் தமது சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.