வூஹான் கொரோனா கிருமித்தொற்றால் பிலிப்பீன்சில் 44 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். அந்தக் கிருமித்தொற்றால் சீனாவைத் தவிர்த்து, வேறு ஒரு நாட்டில் நிகழ்ந்த முதல் உயிரிழப்பு இதுதான். அந்த ஆடவரும் வூஹானில் இருந்து பிலிப்பீன்ஸ் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 21ஆம் தேதி அவரும் இன்னொரு சீனப் பெண்ணும் ஹாங்காங் வழியாக பிலிப்பீன்ஸ் சென்றனர். அங்கு செல்வதற்கு முன்னரே அந்த ஆடவரை கொரோனா கிருமி தொற்றியதாகக் கூறப்படுகிறது. அவருடன் சென்ற பெண்ணையும் அக்கிருமி தொற்றி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பிலிப்பீன்ஸ் சுகாதாரச் செயலாளர் தெரிவித்தார்.
"சீனாவிற்கு வெளியே வூஹான் கிருமித்தொற்றால் நிகழ்ந்த முதல் மரணம் இதுதான்," என்றார் பிலிப்பீன்சிற்கான உலக சுகாதார நிறுவனப் பிரதிநிதி ரபீந்திர அபயசிங்கே.
300ஐத் தாண்டிய உயிரிழப்பு
இந்நிலையில், வூஹான் கிருமித்தொற்றால் மாண்டவர்களின் எண்ணிக்கை 305ஆக அதிகரித்து உள்ளது. ஹுபெயில் மட்டும் 294 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் அந்தக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,000ஐ நெருங்கிவிட்டது.
வூஹானில் இருந்து 800 கி.மீ. தொலைவில் இருக்கும் வென்ஸோ நகரமும் முடக்கப்பட்டுள்ளது. ஒன்பது மில்லியன் பேர் வசிக்கும் அந்த நகரில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவர் மட்டும் இரு நாட்களுக்கு ஒருமுறை வெளியே சென்று தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் 46 நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளும் மூடப்பட்டுள்ளன.
வென்ஸோ நகரில் மட்டும் 265 பேரை வூஹான் கொரோனா கிருமி தொற்றியுள்ளது.
இதனிடையே, சீனாவின் ஹூனான் மாநிலத்தில் எச்5என்1 பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக வேளாண்மை, ஊரக அமைச்சு தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சலால் ஷாயாங் நகரில் 4,500 கோழிகள் மாண்டு விட்டன; 17,828 கோழிகள் கொல்லப்பட்டன. ஆயினும், மனிதர்களுக்கு அந்தக் காய்ச்சல் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலம், பைகுந்த்பூரிலும் இவ்வகை காய்ச்சலால் 5,634 கோழிகள் கடந்த வாரம் இறந்துபோயின.
இந்தியாவில் 2வது பாதிப்பு
வூஹான் கிருமித்தொற்றால் இந்தியாவில் இரண்டாவது நபர் பாதிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டின் சுகாதார அமைச்சு உறுதிசெய்து உள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் சீனாவில் கல்வி கற்று வருபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வூஹானில் இருந்து நேற்று 2வது விமானம் மூலம் 323 இந்தியர்களும் மாலத் தீவு நாட்டினர் எழுவரும் டெல்லி சென்றடைந்தனர்.

