ஜப்பானின் யோக்கொஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் இருப்பவர்களில் குறைந்தது பத்துப் பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற அந்த சொகுசுக் கப்பலில் இருக்கும் 3,700 பயணிகளும் ஊழியர்களும் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்று ‘பிரின்சஸ் குரூசஸ்’ நிறுவனம் கூறியிருக்கிறது.
அவர்களில் இதுவரை கிட்டத்தட்ட 300 பேருக்கு மருத்துவச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கடந்த மாதம் அந்தக் கப்பலில் பயணம் செய்த 80 வயது ஹாங்காங் ஆடவர் ஒருவர் அக்கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, கப்பலில் சோதனைகள் தொடங்கின.
இதனிடையே, 1,800க்கும் மேற்பட்ட பயணிகள், ஊழியர்களுடன் ‘வோர்ல்டு டிரீம்’ என்ற இன்னொரு சொகுசுக் கப்பல் ஹாங்காங்கில் நிறுத்தப்பட்டு, அவர்களிடம் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தைவானின் கவ்ஷியூங் துறைமுகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அந்தக் கப்பல் ஹாங்காங்கில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19-26ஆம் தேதிகளுக்குள் அந்தக் கப்பலில் ஏறிய சீனர்கள் மூவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்கப்பலில் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் ஹாங்காங்வாசிகள் என்றும் தெரிவிக்கப்பட்டது.