சீனாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் ஊழியர்கள் குறித்த விவரங்களை அவர்களின் முதலாளிகள் மனிதவள அமைச்சிடம் அளிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முடுக்கி விட்டுள்ளது. அதன்படி, சீனாவில் இருந்து திரும்பும் ஊழியர்கள் அனைவரும் 14 நாள் விடுப்பில் இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்து இருக்கிறார்.
இதன்மூலம் அந்த ஊழியர்கள் சிங்கப்பூர் திரும்புவது தாமதமாகலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அப்படி 14 நாள் கட்டாய விடுப்பில் இருக்கும் ஒவ்வோர் ஊழியருக்கும் அவருடைய முதலாளிக்கு நாளொன்றுக்கு $100 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, தனிமைப்படுத்தப்படும் ஊழியர்களின் முதலாளிகளுக்கும் சொந்தத் தொழில் செய்யும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அந்தத் தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.
கட்டாய விடுப்பில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அந்தக் காலகட்டத்திற்கான வெளிநாட்டு ஊழியர் தீர்வையும் தள்ளுபடி செய்யப்படும். இது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
அமைச்சர் வோங்கும் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோவும் துவாஸ் வியூ வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிக்கு நேற்று சென்றிருந்தனர். கிருமித் தொற்று பாதிப்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஊழியர்களைத் தனிமைப்படுத்தவும் கட்டாய விடுப்பில் இருக்கவேண்டிய ஊழியர்களுக்கான 32 படுக்கைகளுடன் கூடிய தனி அறையையும் அவர்கள் பார்வையிட்டனர்.
விசாரணையைத் தொடங்கிய உலக சுகாதார நிறுவனம்
பன்னாட்டு நிறுவனமொன்றின் அனைத்துலக ஊழியர்கள் சிங்கப்பூரில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் அவர்களில் குறைந்தது மூவர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இவ்விவகாரம் குறித்து உலக சுகாதார நிறுவனம் விசாரித்து வருகிறது.
கடந்த மாதம் 16ஆம் தேதியில் இருந்து 23ஆம் தேதி வரை கிராண்ட் ஹயட் ஹோட்டலில் நடைபெற்ற அந்த மாநாட்டில் அந்நிறுவனத்தின் அனைத்துலக ஊழியர்கள் 94 பேர் பங்கேற்றனர். அவர்களில் மலேசியா, தென்கொரிய நாடுகளைச் சேர்ந்த மூவருக்குக் கிருமித்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவ்விரு நாடுகளும் உறுதிசெய்தன. அத்துடன், பங்கேற்பாளர்களில் மேலும் நால்வர் அக்கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக சிங்கப்பூர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.
அந்த நிறுவனத்தின் பெயர், அது என்ன தொழில் செய்து வருகிறது போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.
கொரோனா கிருமித்தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்ட வூஹான் நகரத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட சீன நாட்டவர் பலரும் அக்கூட்டத்தில் பங்கேற்றதாக மலேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளின் சுகாதார அமைச்சுகளுடன் உலக சுகாதார நிறுவனம் ஒத்துழைத்து வருகிறது,” என்று உலக சுகாதார நிறுவனப் பேச்சாளரான ஒலிவியா லாவ் டேவிஸ் சொன்னதாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி கூறியது.
“பல நாடுகளும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், உள்நாட்டிலேயே கிருமித்தொற்று பரவியதாக பல சம்பவங்கள் கண்டறியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார் திருவாட்டி ஒலிவியா.
சிங்கப்பூரில் இதுவரை அந்தக் கிருமித்தொற்றால் ஆறு மாதக் குழந்தை உட்பட 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் நடந்த வர்த்தகக் கூட்டத்துடன் தொடர்புபடுத்தப்படும் சம்பவங்கள், சீனாவிற்கு வெளியிலும் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குக் கிருமித்தொற்று பரவி வருகிறது என்பதை எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது. இது கவலை தருவதாக உள்ளது என்றும் பெரியளவில் கிருமித்தொற்று பரவக்கூடும் என்பதை இது கோடிகாட்டுவதாக உள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.