கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் உள்ள அனைத்து உணவு அங்காடி நிலையங்களிலும் துப்புரவுப் பணிகளை தேசிய சுற்றுப்புற வாரியம் முடுக்கி விட்டுள்ளது.
உணவு அங்காடி நிலையங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்கள் நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகின்றன.
இதற்கு முன்பு அவை நாளுக்கு ஒருமுறை மட்டுமே சுத்தம் செய்யப்பட்டன.
பயன்படுத்தப்பட்ட, பயன்படுத்தப்படாத மேசைகள் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகின்றன.
அங்காடி நிலையங்களில் உள்ள கழிவறைகளை துப்புரவுப் பணியாளர்கள் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை குளோரின் கிருமி நாசினியைப் பயன்படுத்தி சுத்தம் செய்கின்றனர்.
கைகளைக் கழுவ பயன்படுத்தப்படும் சோப்பில் கிருமி நாசினி சேர்க்கப்பட்டுள்ளது. இதைத் துப்புரவுப் பணியாளர்கள் அடிக்கடி நிரப்புவர்.
கடந்த மாதம் 29ஆம் தேதியன்று துப்புரவு, சுகாதார வழிகாட்டி நெறிமுறைகளை சிங்கப்பூரில் உள்ள 114 உணவு அங்காடி நிலையங்கள், ஈரச்சந்தைகள் ஆகியவற்றில் இருக்கும் கடைக்காரர்களுக்கு தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர் உணவு முகவையும் இணைந்து அனுப்பின.
கைப்பிடிகள், மேசைகள், நாற்காலிகள் போன்ற பொதுமக்களின் கைபடும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்ய துப்புரவு ஒப்பந்தக்காரர்களுடன் வாரியம் இணைந்து செயல்படுவதாக சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் தெரிவித்தார்.
கொரோனா கிருதித் தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் உயர்தர சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உணவு அங்காடி நிலையத்தில் சாப்பிட்டு முடித்தவுடன் தட்டுகளைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் உதவலாம் என டாக்டர் கோர் கூறினார்.
“அவ்வாறு செய்வதன் மூலம் மேசைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது மட்டுமல்லாது துப்புரவுப் பணியாளர்களின் வேலைப் பளுவும் குறையும். அதனால் அவர்கள் உணவு அங்காடி நிலையங்களைத் துப்பரவு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தலாம்,” என்றார் டாக்டர் கோர்.
தியோங் பாரு சந்தையில் உள்ள உணவு அங்காடி நிலையத்தை துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்வதை அவர் நேற்று பார்வையிட்டார்.
உயர்தர சுகாதார நிலையை நிலைநாட்டுமாறு அவர் உணவுக் கடைக்காரர்களுக்கு நினைவூட்டினார். நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூரில் இதுவரை 28 பேர் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஆறு மாதக் குழந்தையும் அடங்கும். இருப்பினும், சிங்கப்பூரில் சமூக அளவில் கொரோனா கிருமி பரவியதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.