ஜப்பானின் யோக்கொஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டையமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் இருப்போரில் மேலும் 41 பேரை கொரோனா கிருமி தாக்கியிருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதையடுத்து, அக்கப்பலில் இருப்போரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்ட 41 பேரும் தோக்கியோ, சைத்தாமா, சிபா, கனகாவா, ஷிஸோக்கா ஆகிய வட்டாரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.
‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற அந்தக் கப்பலில் 56 நாடுகளைச் சேர்ந்த 2,666 பயணிகளும் 1,045 ஊழியர்களும் உள்ளனர். அவர்களில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட 273 பேருக்கு மருத்துவச் சோதனை நடத்தப் பட்டது.
கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப் பட்ட 61 பேரில் 28 பேர் ஜப்பானியர்கள்; அமெரிக்கர்கள் 11 பேர்; ஆஸ்திரேலியர்கள், கனடியர்கள் தலா எழுவர்; சீனர்கள் மூவர்; பிரிட்டன், நியூசிலாந்து, தைவான், பிலிப்பீன்ஸ், அர்ஜெண்டினா நாட்டினர் தலா ஒருவர்.
இந்நிலையில், சொகுசுக் கப்பலில் உள்ள அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் முடிவை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்று ஜப்பானிய சுகாதார அமைச்சர் கட்சுனோபு காட்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தனிமைப்படுத்தப்பட்ட அந்த சொகுசுக் கப்பலில் சிங்கப்பூரர்கள் ஐவர் இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
தேவையான தூதரக உதவிகளை வழங்குவதற்காக தோக்கியோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சு கூறியது.
ஒரே நாளில் 73 பேர் மரணம்
இதற்கிடையே, கிருமித்தொற்றால் நேற்று முன்தினம் ஒரே நாளில் சீனாவில் 73 பேர் பலியானதை அடுத்து, மொத்த உயிரிழப்பு 638ஆக அதிகரித்துள்ளது. அதுபோல், அந்தக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 31,000ஐத் தாண்டியது.