சிங்கப்பூரில் தற்போது ஏழு புதிய கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு சனிக்கிழமை (பிப்ரவரி 8ஆம் தேதி) அறிவித்தது. இவற்றில் ஐந்து, முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவை.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் டாக்சி ஓட்டுநரும் தனியார் வாகன ஓட்டுநரும் ஒருவர் என அமைச்சு கூறியது. ஐந்து சம்பவங்களுடன் தொடர்புடைய புதிய நோய்ப் பரவல் இடம் இருக்கக்கூடும் என்றும் அது பாயா லேபாவிலுள்ள 'த லைப் சர்ச் அண்ட் மிஷன்ஸ்' என்ற தேவாலயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40க்குக் கூடியுள்ளது. இதுவரை இரண்டு நோயாளிகள் வீடு திரும்பியுள்ளபோதும் நால்வர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் அவசர நிலைப் பிரிவில் கண்காணிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.