சிங்கப்பூருக்கான கத்தாரின் தூதரகம் தேவையின்றி சிங்கப்பூருக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. குவைத் இது போன்ற எச்சரிக்கை விடுத்த மாறுநாள் கத்தார் இந்த அறிவுரையை வெளியிட்டுள்ளது. தனது குடிமக்களை சிங்கப்பூருக்குச் செல்லவேண்டாம் என எச்சரித்ததுடன் சிங்கப்பூரிலுள்ள தனது மக்களை உடனே தாயகம் திரும்புமாறு குவைத் கடந்த சனிக்கிழமை கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா கிருமிப்பரவலின் வேகம் கூடியுள்ளது. இந்நோய் தொற்றியுள்ள இங்குள்ள 43 பேரில் பாதிக்கும் அதிகமானோருக்கு கொரோனா நோய்க்கிருமி சிங்கப்பூரிலேயே பரவியுள்ளது. இவர்களில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தற்போது சீனாவுக்கு அடுத்து ஆக அதிகமான கொரோனா கிருமி நோயாளிகளைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் உள்ளது. இதற்கிடையே இந்தியா, சீனாவிலிருந்து வரும் விமானப் பயணங்களைக் கட்டுப்படுத்தியதுடன் சிங்கப்பூரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் வரும் விமான பயணிகளையும் தனது விமான நிலையங்களில் கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்துகிறது.