கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 47 வயது மாது முழுமையாகக் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.
திருவாட்டி ஸாங் என்று மட்டுமே தம்மை அடையாளப்படுத்த விரும்பு வதாக அவர் கூறியதாக தெரிவித்த சுகாதார அமைச்சு, கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்ட 15வது நபர் அவர் எனக் கூறியது.
வூஹான் நகரிலிருந்து ஜனவரி 30ஆம் தேதி சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்ட 92 சிங்கப்பூரர்களில் அவர், அவரது கணவர், அவர்களது பதின்மவயது மகன் ஆகியோரும் அடங்குவர்.
கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற குடும்ப மாதான திருவாட்டி ஸாங்கிற்கு வூஹானிலிருந்து புறப்பட்டபோது எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
சிங்கப்பூரில் இறங்கியதும் அவருக்கு காய்ச்சல் இருந்தது. அவர் தேசிய தொற்றுநோய் சிகிச்சை நிலையத்துக்கு ஆம்புலன்ஸ் வண்டியில் அனுப்பிவைக்கப்பட்டார்.
“நான் மிகவும் பயந்துவிட்டேன். பிராணவாயுக் குழாய்களை மூக்கில் பொருத்தினார்கள். ஆனால் எனது நுரையீரல் வேலை செய்யாததால் அது பயனளிக்கவில்லை. மூச்சு விட மிகவும் சிரமப்பட்ட அந்த நாள் லேசாக நினைவிருக்கிறது. “நான் சாகப் போகிறேனா?” என்றே நினைத்தேன்,” என்று சுகாதார அமைச்சு பகிர்ந்துகொண்ட அவரது அனுபவத்தில் கூறியிருந்தார்.
அவர் உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
“அப்போது என்னால் அசைய முடியவில்லை. ஆனால் நினைவு தெளிவாக இருந்தது. பேசுவது தெளிவாகக் கேட்டது. டாக்டர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு கவலைப்பட வேண்டாம் என்றார்,” என நினைவுகூர்ந்தார். அவரது கணவருக்கு கிருமித்தொற்று ஏற்படவில்லை. தொற்று இருந்த அவரது மகன் தேசிய தொற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாதி ஒருவர் தினமும் தமது மகனின் மூக்கில் இருந்து மாதிரி திரவத்தை எடுத்து சோதிப்பதாகவும் சொன்ன திருவாட்டி ஸாங், “அவருக்கு கிருமித் தொற்று முழுமையாகக் குணமாகவில்லை, ஆனால் வேறு எந்த அறிகுறியும் இல்லை,” என்றார்.
“தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியில் வந்ததும், “சில இரவுகள் என்னால் தூங்கவே முடியவில்லை” என்று எனது கணவர் கூறினார். அவர் நிலையில் நான் இருந்திருந்தால் உடைந்துபோயிருப்பேன் என்றார் திருவாட்டி ஸாங்.
தேசிய தொற்றுநோய் சிகிச்சை நிலையத்திலுள்ள மருத்துவ ஊழியர்களுக்குத் தமது நன்றியைத் தெரிவித்த திருவாட்டி ஸாங், அவர்கள் தம்மை தமது குடும்பத்தினர் போல் கவனித்துக்கொண்டதாகக் கூறினார்.