தமிழ் மொழி விழா 2020 ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதி மே 3ஆம் தேதி வரை நடக்கவிருந்த இந்த விழாவின் ஏற்பாட்டாளரான வளர்தமிழ் இயக்கம் இந்த ஒத்திவைப்பை இன்று அறிவித்தது. வளர்தமிழ் இயக்கம் கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மொழி விழாவை நடத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து இவ்விழா ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறை.
விழாவை ஒத்திவைக்கும் முடிவு சுலபமல்ல எனத் தெரிவித்தார் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு எஸ். மனோகரன். "இருந்தபோதும் விழாவின் நிகழ்ச்சிகளில் பல, மாணவர்களுக்கும் குடும்பங்களுக்கும் நடத்தப்படுபவை. இவர்களது பாதுகாப்பும் நலனும் எங்கள் தலையாய அக்கறை,"
"எனவே, கோவிட் 19 கிருமிப்பரவலால் மக்கள் பெருவாரியாகக் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய சுகாதார அமைச்சு பரிந்துரைத்ததற்கு ஒத்துபோகும் விதமாக நாங்கள் இந்த விழாவை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்," என்று திரு மனோகரன் கூறினார்.
விழாவுக்கு நிதியாதரவு, நிகழ்ச்சி ஏற்பாடு உள்ளிட்டவற்றுக்குப் பங்களித்த ஆதரவாளர்களுக்கு நன்றி கூற விரும்புவதாகத் திரு மனோகரன் தெரிவித்தார். நிலைமையைக் கண்காணிப்பதுடன், ஆதரவு அமைப்புகளுடனும் சமூக பங்காளிகளுடனும் அணுக்கமாக செயல்படும் என்றது வளர்தமிழ் இயக்கம்.