சிங்கப்பூரில் நேற்று புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும் ஒரு நற்செய்தியாக சிகிச்சை பெற்று வந்த இருவர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களையும் சேர்த்து இதுவரை 51 பேர் கிருமித்தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து சென்றுவிட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.
ஜனவரி 23ஆம் தேதி சிங்கப்பூரின் முதல் சம்பவம் பதிவானது. அன்று முதல் நேற்று முன்தினம் வரை பதிவானவர்களின் எண்ணிக்கை 89.
குணமடைந்து வீடு திரும்பியோர் தவிர சிகிச்சை பெற்று வரும் 38 பேரில் பெரும்பாலானோரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் ஐவரின் நிலைமை மோசமாக இருப்பதால் தீவிர மருத்துவப் பராமரிப்பில் அவர்கள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சு நேற்று மாலை கூறியது.