கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அதிபர், பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்றச் செயலாளர்கள் ஆகியோர் தங்களின் ஒரு மாத ஊதியத்தை விட்டுத்தருவர் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத படித்தொகைகளை விட்டுத் தருவர். பொதுச் சேவை உயரதிகாரிகளில் சிலர் அரை மாத ஊதியத்தைப் பெறமாட்டார்கள்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முதல்நிலையில் நின்று பணியாற்றி வரும் பொதுத் துறை ஊழியர்களுக்கு ஒரு மாதம் வரையிலான சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று நிதியமைச்சருமான திரு ஹெங் அறிவித்துள்ளார்.
பெரும்பாலான சுகாதாரப் பராமரிப்பு அதிகாரிகள், சுகாதார அமைச்சு அதிகாரிகள், கிருமித்தொற்றுக்கெதிரான போராட்டத்தில் நேரடித் தொடர்புடைய மற்ற முன்னணி அமைப்புகளின் அதிகாரிகள் ஆகியோர் இந்த சிறப்பு போனசுக்குத் தகுதிபெறுவர்.
“குறிப்பிடத்தக்க பங்காற்றிவரும் நமது பொதுத் துறை அதிகாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்,” என்றார் திரு ஹெங்.
‘பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் (பிஎச்பிசி)’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ள 900 பொது மருந்தகங்களுக்கு ஒருமுறை மட்டும் ‘கொவிட்-19 மானியம்’ வழங்கப்படும். மூச்சுப் பிரச்சினைகளுடன் வரும் நோயாளிகளின் பராமரிப்பிற்காக அந்த மருந்தகங்கள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்த மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
“நமது முதல்நிலை ஊழியர்கள், குறிப்பாக மறுசீரமைக்கப்பட்ட மருத்துவமனைகளின் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், அளப்பரிய துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இன்னதென அறியப்படாத கிருமிக்கு எதிரான போரில் ஒவ்வொரு நாளும் அவர்களின் அர்ப்பணிப்பு தொடர்கிறது,” என்று துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
இதனிடையே, “கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக தொடரும் போராட்டத்தில் நமது முதல்நிலை ஊழியர்கள், குறிப்பாக சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், நம்மைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அயராது பணியாற்றி வருகின்றனர். அவர்களது அர்ப்பணிப்பையும் கடும் உழைப்பையும் அங்கீகரிக்கும் வகையில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் சிறப்பு போனசை அறிவித்துள்ளார்,” என்று பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கம் மூலமாகத் தெரிவித்துள்ளார்.