சிங்கப்பூரில் புதிதாக நான்கு பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் மூவர், கிருமி பரவல் இடமாக புதிதாக கண்டறியப்பட்டுள்ள ‘விஸ்லேர்ன் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என்று சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
எஞ்சிய ஒருவரின் தொடர்புகளைக் கண்டறியும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள், ஒருவர் ஜப்பானியர். எஞ்சிய ஒருவர் மியன்மார் நாட்டவர்.
அவர்கள் அனைவரும் அண்மையில் சீனாவுக்கோ, தென்கொரியாவின் டேகு அல்லது சியோங்டோ பகுதிக்கோ பயணம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே சமயம், கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து இருவர் வீடு திரும்பியதாகவும் அமைச்சு கூறியது. இவர்களையும் சேர்த்து, இதுவரை 74 பேர் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் எஞ்சியுள்ள 32 பேரில், பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகியோ, மேம்பட்டோ வருகிறது. எழுவர் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.