சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் கடுமையாகும் விதிமுறைகள்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் கடுமையாகும் விதிமுறைகள்

2 mins read
aa1679c7-167b-476e-9e65-2904340ad5b0
முத்தரப்புப் பங்காளித்துவத்தின் நியாயமான வேலை நியமன விதிமுறைகளின்கீழ் முதலாளிகள் தொடர்ந்து நியாயமான முறையில்  ஊழியர்களின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சம்பளம் வழங்க வேண்டும் என்றார் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படுகிறது. வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தங்களுக்கும் நியாயமான போட்டி நிலவுவதை சிங்கப்பூரர்களுக்கு உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வரும் மே மாதத்திலிருந்து EP எனப்படும் வேலை அனுமதி சீட்டு மூலம் வேலைக்கு எடுக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மாதத்துக்குக் குறைந்தபட்சம் $3,900 வழங்க வேண்டும். தற்போது அந்தத் தொகை $3,600ஆக உள்ளது.

"உள்ளூர் தன்னாட்சி பல்கலைக்கழகங்களிலிருந்து புதிதாகப் பட்டம் பெறுவோருக்கு வழங்கப்படும் சம்பளத்தை மேம்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கையுடன் இது ஒத்துப்போகிறது," என்று தமது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ இன்று (மார்ச் 3) கூறினார்.

EP வேலை அனுமதிச் சீட்டுடன் பணியாற்ற விரும்பும் மூத்த, கூடுதல் அனுபவம் கொண்டவர்களுக்கான தகுதி நிலையும் உயர்த்தப்படுகிறது. உதாரணத்துக்கு 40 வயது மதிக்கத்தக்க EP விண்ணப்பதாரை வேலைக்கு எடுக்க வேண்டுமாயின் அவருக்கு புதிய குறைந்தபட்ச சம்பளமான $3,900ஐ போல கிட்டத்தட்ட இரு மடங்கு ஊதியம் வழங்க வேண்டும்.

"EP விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் திறன்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இது ஒரு நியாயமான மாற்றம். உள்ளூர் நடுவயது நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கு இது நியாயமான சம தளத்தை ஏற்படுத்தி தருகிறது," என்வார் அமைச்சர் டியோ.

ஏற்கெனவே வேலையில் இருக்கும் EP ஊழியர்கள் அடுத்த ஆண்டு மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து தங்கள் வேலை அனுமதி சீட்டைப் புதுப்பிக்கும்போது புதிய விதிமுறைக்கு உட்படுவர்.

வொர்க் பர்மிட், S Pass வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க விரும்பும் நிறுவனங்கள் அதற்குத் தகுதி பெற உள்ளூர் ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக $1,400 சம்பளம் தர வேண்டும். இந்தத் தொகை தற்போது $1,300ஆக உள்ளது. புதிய விதிமுறை வரும் ஜூலை மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

முத்தரப்புப் பங்காளித்துவத்தின் நியாயமான வேலை நியமன விதிமுறைகளின்கீழ் முதலாளிகள் தொடர்ந்து நியாயமான முறையில் ஊழியர்களின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சம்பளம் வழங்க வேண்டும் என்றார் அமைச்சர் டியோ.

சில முதலாளிகள் EP ஊழியர்களை வேலையில் தொடர்ந்து வைத்திருக்க குறைந்தபட்ச சம்பளத் தொகை உயர்த்தப்படும்போது அவற்றை உயர்த்துவதும் உள்ளூர் ஊழியர்கள் அந்த வெளிநாட்டு ஊழியர்களைவிட சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களுக்கு

அந்த முதலாளிகள் சம்பள உயர்வு தராததும் மனிதவள அமைச்சுக்குத் தெரியும் என்றார் அமைச்சர் டியோ.

இத்தகைய நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியாதபடி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் டியோ எச்சரிக்கை விடுத்தார்.

நியாயமான முறையில் வேலைக்கு ஆள் எடுப்பதை வலியுறுத்தும் CFC வரையறைகளின்படி, நிறுவனங்கள் EP விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு தேசிய வேலைகள் இணையப்பக்கமான MyCareersFuture.sgல் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

$20,000 வரை மாத சம்பளம் வங்கும் வேலைகள் அதில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்றும் வரும் மே மாதம் முதல் அது நடப்புக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது அதற்கான சம்பள வரம்பு $15,000 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

#வெளிநாட்டு ஊழியர்கள் #சிங்கப்பூர் #தமிழ்முரசு