சிங்கப்பூரில் மேலும் 14 புதிய கொவிட் -19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நோய்வாய்ப்பட்டவர்களில் ஒன்பது பேருக்கு வெளிநாட்டில் இந்நோய் தொற்றியதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
இது, ஒரே நாளில் பதிவாகியுள்ள ஆக அதிமான எண்ணிக்கை.
இவர்களில் மூன்று நோயாளிகள், முன்னதாகக் கிருமியைத் தொற்றியுள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள். இவர்களில் லெங்கோக் பாருவிலுள்ள 'மை வர்ல்ட் பிரீஸ்கூல்' பள்ளியில் கற்பிக்கும் பிலிப்பீன்சைச் சேர்ந்த 28 வயது பெண்ணும் ஒருவர்.
மற்றொருவரான 29 வயது ஆடவர், நோய்வாய்ப்பட்ட 208ஆவது நபருடன் தொடர்புடையவர்.
உள்ளூரிலேயே இந்நோயைத் தொற்றிய எஞ்சிய இரண்டு பேர், பிப்ரவரி 15ஆம் தேதியில் சாப்ரா ஜாய் கார்டன் உணவகத்தில் நடத்தப்பட்ட தனியார் விருந்து நிகழ்ச்சியுடன் தொடர்புடையவர்கள்.
புதிய சம்பவங்களுடன் இந்நோய் தொற்றியுள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை 226 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 13 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ஆயினும் 105 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்.