கொரோனா கிருமி பரவாமல் தடுக்கும்விதமாக சிங்கப்பூரில் உள்ள 70 பள்ளிவாசல்களும் குறைந்தது அடுத்த ஒன்பது நாட்களுக்கு, அதாவது இம்மாதம் 26ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, அடுத்த வியாழக்கிழமை வரை, அனைத்து கூட்டுத் தொழுகைகளும் பள்ளிவாசல்களில் இடம்பெறாது.
பள்ளிவாசல்கள் மீண்டும் திறக்கப்பட்டதும் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று முயிஸ் தெரிவித்துள்ளது.
பள்ளிவாசல்களுக்கு வரும் அனைவரின் உடல் வெப்பநிலையை அவர்களைத் தொடாமல் பரிசோதித்தல், உடல்நலம் குன்றியிருப்போரைத் திருப்பி அனுப்புதல், தொழுகைக்கு வருவோர் தங்களது சொந்த தொழுகைப் பாயைக் கொண்டு வரப் பணித்தல் உள்ளிட்டவை அதில் அடங்கும்.
கிருமித்தொற்றால் மேலும் அதிகமான சிங்கப்பூரர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பள்ளிவாசல்களை மூடும் காலத்தை மேலும் நீட்டிக்க முடிவு செய்ததாக முயிஸ் விளக்கமளித்தது.
கடந்த மாதம் 27ஆம் தேதியில் இருந்து இம்மாதம் 1ஆம் தேதி வரை சிலாங்கூரில் நடந்த சமயக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,000 பேர் கலந்துகொண்டனர். அவர்களுள் கிட்டத்தட்ட 90 சிங்கப்பூரர்களும் அடங்குவர். அந்த 90 பேரில் குறைந்தது ஐவரைக் கிருமி தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கிருமித்தொற்றுடன் அவர்கள் இங்குள்ள பத்துப் பள்ளிவாசல்களுக்குச் சென்றதும் தெரியவந்துள்ளது.
இம்மாதம் 3ஆம் தேதியில் இருந்து 11ஆம் தேதிக்குள் அவர்கள் அந்தப் பள்ளிவாசல்களுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. கிருமி தொற்றியோரில் பள்ளிவாசல் ஊழியரும் ஒருவர்.
அந்தப் பள்ளிவாசல்களில் உறுப்பிய முறை பின்பற்றப்படுவதில்லை. அத்துடன், போதிய பதிவேடுகளும் இல்லை என்பதால் அந்தப் பள்ளிவாசல்களுக்குச் சென்ற அனைவரையும் அடையாளம் காண்பது முடியாத காரியம் எனச் சொல்லப்பட்டது.
அதனால், கிருமி பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது மட்டும் போதுமானதாக இருக்காது என்று முயிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
ஆதலால், மலேசியாவில் நடந்ததுபோல இங்கும் ஒரே இடத்தில் அதிகமானவர்கள் கூடும்போது கிருமி பரவும் அபாயம் உள்ளது என்று முயிஸ் கருதுகிறது.
"அதனால், சுகாதார அமைச்சின் பரிந்துரைகளை ஏற்று, அடுத்த ஒன்பது நாட்களுக்கு, அதாவது 26ஆம் தேதி வரை பள்ளிவாசல்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது," என்று முயிஸ் தெரிவித்தது.
கிருமி பரவாமல் தடுக்கும் நோக்கில், அனைத்துப் பள்ளிவாசல்களையும் சுத்தம் செய்வதற்காக அடுத்த ஐந்து நாட்களுக்கு அந்த சமயத் தலங்கள் அனைத்தும் மூடப்படும் என கடந்த வெள்ளிக்கிழமை முயிஸ் அறிவித்தது. பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருப்பது சிங்கப்பூர் வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது, மேலும் ஒன்பது நாட்களுக்கு அது நீட்டிக்கப்பட்டு இருப்பதன்மூலம் கிருமியின் நோயரும்புகாலம் முடிவுக்கு வரும். கொரோனா கிருமி 14 நாட்களுக்கு நோயைப் பரப்பும் தன்மையைக் கொண்டிருக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

