மலேசியாவில் நாளை (மார்ச் 18) முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரைதேசிய அளவில் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் முஹைதீன் யாசின் நேற்று இரவு அறிவித்தார். கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"பொறுமையாக இருந்து சவாலைச் சமாளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், பதற்றப்பட வேண்டாம் என்றும் அமைதியாக இருக்குமாறும் மக்களை அவர் கேட்டுக்கொண்டார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளின் மூலம் கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆணையை மதித்து நடக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்ட அவர், தேசிய பாதுகப்பு மன்றம் தினமும் கூடி நிலைமையைக் கண்காணிக்கும் என்றார்.
உணவு, முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் போன்றவை போதிய அளவுக்கு இருப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சமயம், சமூகம், கலாசாரம் தொடர்பான நிகழ்வுகள் உள்ளிட்ட கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்களும் வர்த்தகங்களும் மூடப்படும். பேரங்காடிகள், சந்தைகள், சிறிய சந்தைகள், பல்பொருள் அங்காடிக் கடைகள் இயங்கும்.
வெளிநாடுகளுக்குச் செல்ல மலேசியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து மலேசியாவுக்குத் திரும்புவோர், சுகாதாரப் பரிசோதனைக்குட்படுவதுடன் அவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வெளிநாட்டினர் மலேசியாவுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்படும்.
நீர், மின்சாரம், ஆற்றல், தொலைத்தொடர்பு, அஞ்சல் சேவைகள், போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஒலிபரப்பு, நிதி, வங்கி, சுகாதாரம், மருத்துவம், தீயணைப்பு, சிறைகள், துறைமுகம், பாதுகாப்பு, தற்காப்பு, துப்புரவு, உணவு வழங்கல் உட்பட இன்றியமையாச் சேவைகள் தவிர மற்ற அரசாங்க, தனியார் வளாகங்கள் மூடப்படும்.
#மலேசியா #கொரோனா #தமிழ் முரசு