ஒவ்வொரு நாளும் சிங்கப்பூருக்கு வேலைக்காக பயணம் செய்யும் மலேசியர்கள் இன்று முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை சிங்கப்பூருக்குள் நுழைய முடியாது என்று மலேசியாவின் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் கைருல் டிசைமி டாவூட் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, மலேசியர்களை வெளிநாட்டிற்கு செல்லத் தடைசெய்துள்ளது.
"நாளை (மார்ச் 18) முதல் மார்ச் 31 வரை இது அனுமதிக்கப்படாது" என்று மலேசியாகினி செய்தித் தளத்துக்கு வாட்ஸ்அப் வழியாக திரு கைருல் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
ஜோகூரில் வசித்து சிங்கப்பூரில் பணியாற்றும் மலேசியர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
மலேசிய தேசிய பாதுகாப்பு மன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கை இதை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
மலேசியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்விதிமுறை நாள்தோறும் வேலை மற்றும் கல்வி தொடர்பாக சிங்கப்பூருக்குள் நுழையும் அனைவருக்கும் பொருந்தும் என்று மன்றம் விளக்கம் அளித்தது.
அதே நேரத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் சுகாதாரச் சோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 பரவலைத் தடுக்க நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பிறப்பிக்கப்போவதாக மலேசியப் பிரதமர் முகைதின் நேற்று முன்தினம் இரவு அறிவித்தார்.
அந்த அறிவிப்புக்குப் பிறகு, ஜோகூர் மாநில ஸ்டூலாங் சட்டமன்ற உறுப்பினரான ஜனநாயகச் செயல் கட்சியின் திரு ஆண்ட்ரூ சென் கா எங், ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் பஹாருடின் தாஹிரை அழைத்து இது குறித்து விசாரித்ததாகவும் நிலம் வழியாக சிங்கப்பூருக்கு வேலைக்காகவும் கல்விக்காகவும் நுழையும் அனைத்து மலேசியர்களும் இந்தத் தடையால் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் உறுதிப்படுத்தியதாகவும் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மலேசியா அறிவித்திருக்கும் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, சமய, விளையாட்டு, சமூக மற்றும் கலாசார நிகழ்வுகள் உட்பட அதிகமானோர் கூடும் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கிறது.
வழிபாட்டு இடங்களும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும். ஆனால், பேரங்காடிகள், ஈரச் சந்தைகள், பல்பொருள் அங்காடிக் கடைகள் போன்றவை திறந்திருக்கும்.
மலேசியாவின் அனைத்துப் பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள நீர், மின்சாரம், எரிசக்தி, தொலைத்தொடர்பு, தபால், போக்குவரத்து, நீர்ப்பாசனம், எண்ணெய், எரிவாயு, எரிபொருள், மசகு எண்ணெய், ஒலிபரப்பு, நிதி, வங்கி, சுகாதாரம், மருந்தகங்கள், தீயணைப்பு, சிறைச்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு, துப்புரவு, சில்லறை தொழில் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றைத் தவிர ஏனைய அரசு மற்றும் தனியார் வளாகங்கள் மூடப்படும் என்று நேற்று முன்தினம் பிரதமர் முகைதீன் கூறியிருந்தார்.
இதற்கிடையே, மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் இருவர் மடிந்துவிட்டனர்.
முதலாமவர் சரவாக்கைச் சேர்ந்த 60 வயது தேவாலயப் பாதிரியார். அவர் நேற்றுக் காலை 11 மணிக்கு மரணமுற்றார். மற்றவர், ஜோகூர் பெர்மாய் மருத்துவமனையில் உயிர் நீத்த 34 வயது ஆடவர். அவர் கோலாலம்பூர் சமய நிகழ்வுக்குச் சென்றிருந்தார்.
மலேசியாவில் இதுவரை 673 கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

