கொவிட்-19 கிருமியிலிருந்து காத்துக்கொள்ளும் உயிர்க்கவசமாக முகக்கவசம் கருதப்படுகிறது. எனவே அதன் அவசியம் சிங்கப்பூரில் அதிகமாக உணர்த்தப்பட்டு வருகிறது. நாளை முதல் ( ஏப்ரல் 12) பேரங்காடிகள், மளிகைப் பொருள் கடைகள், மருந்தகங்கள், கடைத்தொகுதிகள் ஆகியவற்றுக்குச் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணியவேண்டும் அல்லது அவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவர்.
இந்நடவடிக்கை வாடிக்கையாளர்களின் நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்டது என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூரும் சிங்கப்பூர் சுற்றுலாத்துறைக் கழகமும் கூட்டறிக்கை வாயிலாக இன்றிரவு அறிவித்தன. விதிமுறைக்குக் கட்டுப்படாத நபர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க கடைத்தொகுதிகளும் பேரங்காடிகளுக்கும் உரிமை உள்ளது என்று அந்த அமைப்புகள் கூறின.
இதற்கிடையே, பேருந்து, ரயில்களில் பயணம் செய்யும்–போதும் சந்தைகளுக்குச் செல்லும்போதும் முகக்கவசத்தை அணிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது நடப்பில் இருக்கும் கிருமிப் பரவல் முறியடிப்பு அதிரடித் திட்டம் முடிவுக்கு வந்த பின்னர் பயணிகள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்து உள்ளார்.
“அதிரடித் திட்டம் முடிவுக்கு வந்த பின்னர் பாதுகாப்பான இடைவெளியை உறுதி செய்வது கடினமான செயலாகிவிடும். அப்போது பொதுப் போக்குவரத்தில் கிருமிப் பரவலை முகக்கவசம் குறைக்கும். எனவே அதனை அணிவது கட்டாயமாக்கப்படும்,” என்று திரு கோ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
“திட்டம் நடப்பில் இருப்பதால் பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட்டம் குறைந்து பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது சாத்தியமாகிறது. ஆனால் கூட்டம் மீண்டும் வரும்போது பாதுகாப்பான இடைவெளி விதி–முறைகள் பயணிகளை நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகளில் காத்திருக்கச் செய்துவிடும். அப்போது அவர்களிடம் எந்தளவுக்குப் பொறுமை இருக்கும் என்பதையும் ஆத்திரம்கூட எழலாம் என்பதையும் என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. இருப்பினும் முகக்கவசம் அணிவது என்பது எல்லா பயணிகளா லும் முடிந்த ஒன்று,” என்றார் அமைச்சர்.
பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்னும் புதிய நடைமுறையை அதிகாரிகள் எடுத்துச்சொல்வார்கள். மேலும் போக்குவரத்து தூதுவர்கள் பயணிகள் மத்தியில் முகக்கவசத்தை நினைவூட்டுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுற்றுப்புற வாரியம் நிர்வகிக்கும் 40 சந்தைகளில் இன்று ஞாயிற்றுக்கி–ழமை முதல் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி இல்லை என்பது மற்றோர் அறிவிப்பு. இந்த நடைமுறை பொதுமக்களோடு சந்தைகளில் கடை வைத்திருப்போரின் உடல்நலத்தையும் பாதுகாக்கும் என்று வாரியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.