தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ள தொழிற்சாலைகளிலும் தற்காலிக தங்குமிடங்களிலும் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இடையே பாதுகாப்பான தூர இடைவெளி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு மனிதவள அமைச்சு முதலாளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் முடிந்தவரை அவர்களது தங்குமிடத்தில் இருப்பதையும் முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
“இந்தக் காலகட்டத்தில், ஊழியர்களின் சம்பளத்தை முதலாளிகள் முறையாக வழங்க வேண்டும். அதேவேளையில் ஊழியர்களின் நலனையும் அவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்,” என்று அமைச்சு வலியுறுத்தியது.
பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் முதலாளிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது. வெளிநாட்டு ஊழியரின் வேலை அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படுவது அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்று.
சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில் மனிதவள அமைச்சின் மேற்கண்ட ஆலோசனையைக் கூறி உள்ளது.
தங்கும் விடுதிகளில் ஊழியர்கள் ஒன்றுகூடக்கூடாது என்பதை இப்புதிய நடைமுறை வலியுறுத்துகிறது.
தற்போதைய காலகட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதலாளிகள் வேளைக்கு வேளை உணவு வழங்க வேண்டும் என்று அமைச்சு கூறியது. அப்போதுதான் ஊழியர்கள் அவர்களது தங்குமிடத்தைவிட்டு வெளியேற அவசியம் இருக்காது.
அதோடு, ஊழியர்களின் சுகாதாரத்தையும் முதலாளிகள் கண்காணிக்க வேண்டும். வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது உடல் வெப்பநிலையை நாள் ஒன்றுக்கு இருமுறை கண்காணிக்க வேண்டும்.
அவர்களுக்குச் சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், தங்கும் விடுதிகளில் உள்ள அதிகாரிகளிடம் உடனே தெரியப்படுத்தி மருத்துவ உதவியை நாட வேண்டும்.
நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊழியர்கள் தங்களது அறையைவிட்டு வெளியே சென்று தங்கும் விடுதியில் உள்ள திறந்தவெளியில் பொழுதைக் கழிக்க முதலாளிகள் வழிவகுக்க வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் தங்கும் விடுதியின் மற்ற புளோக்குகள், மற்ற தளங்களில் தங்கியிருக்கும் சக வெளிநாட்டு ஊழியர்களோடு ஊழியர்கள் ஒன்றுகூடக்கூடாது.
அதைத் தவிர்த்த நேரங்களில், ஊழியர்கள் தங்களது அறைகளிலேயே இருக்க வேண்டும். ஒருவர் மற்றொருவருக்கு இடையே குறைந்தது 1 மீட்டர் தூர இடைவெளி இருப்பதை அவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களை வாங்கவோ அல்லது தாய் நாடுகளில் இருக்கும் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பவோ ஊழியர்கள் தங்கும் விடுதிகளைவிட்டு வெளியேறலாம். ஆனால், குறித்த நேரத்திற்குள் அவர்கள் தங்கும் விடுதிகளுக்குத் திரும்ப வேண்டும்.
தங்கும் விடுதியைவிட்டு வெளியேறும்போதும் விடுதிக்குள் நுழையும்போதும் அவர்கள் தங்களது விவரங்களைப் பதியவைக்க வேண்டும். தாங்கள் செல்லவிருக்கும் இடத்தையும் அதற்கான நோக்கத்தையும் ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும்.
வெளியே செல்லும்போது அவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.