சிங்கப்பூரில் புதிதாக 1,111 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அவர்களையும் சேர்த்து, இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,125ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள். பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 20 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள்.
இன்றிரவு சுகாதார அமைச்சு வெளியிடவிருக்கும் செய்தி அறிக்கையில் ஆக அண்மைய நிலவரம் குறித்த மேல் விவரங்களைத் தெரிவிக்கும்.
சிங்கப்பூரில் நேற்று (திங்கட்கிழமை) ஒரே நாளில் ஆக அதிகமாக 1,426 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 1,396 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் பெரிய எண்ணிக்கையில் ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வரும் வேளையில், பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சமூக அளவில் உறுதிசெய்யப்பட்டுள்ள கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைச் சுகாதார அமைச்சு சுட்டியது. அதாவது, கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 29 சம்பவங்கள் பதிவாகின. அதற்கு முந்தைய வாரம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 39 சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
சமூக அளவில், முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து நிலையாக இருந்து வருகிறது.