மேலும் 618 புதிய கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது. இவற்றுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச்சம்பவங்களின் எண்ணிக்கை 12, 693க்கு அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டோரில் எழுவர் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் என்றும் பெரும்பாலானோர் ஊழியர் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் என்றும் சுகாதார அமைச்சு கூறியது.
நேற்று 897 புதிய சம்பவங்கள் பதிவானதை அமைச்சு அறிவித்திருந்தது. கடந்த ஐந்து நாட்களில் கிருமித்தொற்றின் எண்ணிக்கை 1000க்குக் குறைவாக இருந்தது அதுவே முதல் முறை.
தற்போது தங்குமிடங்களில் உள்ள 323,000 வெளிநாட்டு ஊழியர்களில் 9,929 (சுமார் 3 விழுக்காடு) பேருக்கு இக்கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்களது தங்குமிடச் சூழல் குறித்த பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது.
தங்குமிடங்களில் செய்யப்படும் விரிவான சோதனைகளால் மேலும் பல சம்பவங்களை அடையாளப்படுத்த முடிந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு நோய் கடுமையாக இல்லை எனக் கூறப்படுகிறது.அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள சமூக வளாகங்கள் அல்லது மருத்துவமனைகளின் பொது வார்டுகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.
'எஸ்-11' ஊழியர் தங்கும் விடுதி, சிங்கப்பூரின் ஆகப் பெரிய நோய்ப்பரவல் குழுமமாக இன்னும் உள்ளது. நேற்றைய நிலவரப்படி அங்கு இதுவரை 2,263 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை,சிங்கப்பூரின் ஒட்டுமொத்த கிருமித்தொற்றுச் சம்பவ எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்காக இருக்கிறது.
நேற்றைய நிலவரப்படி சிங்கப்பூரில் 952 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் கொவிட் 19 தொடர்பான உடல்நிலைச் சிக்கல்களால் மடிந்துள்ளனர். நோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட நால்வர் வேறு காரணங்களால் இறந்துள்ளனர்.