சிங்கப்பூரில் இன்று (மே 25) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 344 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,960 ஆகியுள்ளது.
புதிய சம்பவங்களில் நால்வர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
இன்று புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை குறைவாக பதிவானதற்கு, இங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது காரணமாக இருக்கலாம் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
நேற்றைய நிலவரப்படி, கிருமித்தொற்று கண்டவர்களில் மொத்தம் சுமார் 47% அதாவது 14,867 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை மூன்று வாரங்களுக்கு முன்பு அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த இரு வாரங்களாக, புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களைவிட அதிகமாக இருந்து வருகிறாது.
நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மூவர் சிங்கப்பூரர், ஒருவர் வேலை அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, இங்கு இதுவரை 23 பேர் உயிரிழந்தனர்.
உலக அளவில் 5.4 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 345,000 பேர் உயிரிழந்தனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online