கொவிட்-19 கிருமித் தொற்று ஏற்படுத்திய பொருளியல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க $2 பில்லியன் தொகுப்புத் திட்டத்தை நிதியமைச்சரும் துணைப் பிரதமருமான ஹெங் சுவி கியட் அறிவித்துள்ளார்.
வேலைகள், பயிற்சித் தொகுப்புத் திட்டத்தின் மூலம் 40,000 வேலைகளும் 25,000 பயிற்சித் திட்டங்களும் 30,000 திறன் பயிற்சி வாய்ப்புகளும் வழங்கப்பட உள்ளன.
தொகுப்புத் திட்டத்தின் மூலம் 15,000 புதிய வேலைகளை பொதுத் துறை ஏற்படுத்தும். அரசாங்க அமைப்புகள் வர்த்தகங்களுடன் இணைந்து பணியாற்றி 25,000 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
குறிப்பிட்ட பயிற்சித் திட்டங்களுக்குச் சென்றுள்ள உள்ளூர் ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு வெகுமதியையும் அரசாங்கம் வழங்கும்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பணியிடைக்கால வேலைக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆதரவுத் தொகுப்புத் திட்டமும் மேம்படுத்தப்படும் என்று திரு ஹெங் தெரிவித்தார்.
வெகுமதி இரட்டிப்பாக்கப்பட்டு 40 வயது மற்றும் அதற்கு அதிகமான ஊழியர்களின் சம்பளத்தின் 40% ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும். அதிகபட்ச வரம்பாக மொத்தம் ஒருவருக்கு $12,000 வழங்கப்படும்.
40 வயதுக்குக் குறைவான தகுதிபெறும் ஊழியர்களின் 20% சம்பளமும் வழங்கப்படும்.
புதிய தேசிய வேலைகள் மன்றம் அமைக்கப்படும் என்றும் அதற்கு மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தலைவராகச் செயல்படுவார் என்றும் திரு ஹெங் தெரிவித்தார்.