வாகனமோட்டிகள் மின்னியல் சாலைக் கட்டணங்களை (இஆர்பி) ஜூன் 28ஆம் தேதி வரை செலுத்துவதற்கான தேவை இருக்காது.
ஏப்ரல் 6ஆம் தேதியிலிருந்து ரத்து செய்யப்பட்ட இந்தக் கட்டணங்களை மறுஆய்வு செய்ய தொடங்கப்போவதாக நிலப்போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்தது. இந்த மறுஆய்வின் முடிவு ஜூன் 4ஆம் தேதியன்று அறிவிக்கப்படும்.
"சிங்கப்பூர் தனது பொருளியலை ஜூன் 2ஆம் தேதி முதல் படிப்படியாகத் திறப்பதால், மேலும் பலர் தங்களது வேலையிடத்திற்கும் பள்ளிகளுக்கும் செல்வர். இதனால் சாலை போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று ஆணையம் கூறியது.
மின்னியல் சாலைக் கட்டணங்கள் ஒவ்வொரு காலாண்டும் மறுஆய்வு செய்யப்படுவது வழக்கம். இருந்தபோதும், விரைவாக மாறிவரும் கொவிட்-19 கிருமிப்பரவலால் கட்டண மறுஆய்வு நான்கு வாரங்களுக்கு ஒருமுறை செய்யப்படும் என நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.